Thursday, October 13, 2011

அன்றொரு நாள்: அக்டோபர் 2

அன்றொரு நாள்: அக்டோபர் 2

‘இத்தகைய அருந்தகை இப்புவியின்கண் நடமாடினரோ என்று வருங்கால தலைமுறைகள் வியந்து வரும்’ என்று ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் புகழ்ந்த மஹாத்மா காந்தியின் அவதார தினம், அக்டோபர் 2, 1869 என்பது யாவரும் அறிந்ததே. இந்திய விடுதலைக்கு வித்திட்டவர் என்று அவரை உதட்டளவில் புகழும் நாம், அவர் இகலோகத்தை பரலோகமாக பாவித்து, இயங்கிய அரும்பெரும் தவத்தை புரிந்துகொள்ள வில்லை என்று தான் தோன்றுகிறது. சற்றே வித்தியாசமாக, அந்த அதிசய புருஷோத்தமனின் விந்தையான சில செயல்பாடுகளை, என் சொந்த அபிப்ராயங்களில் தோய்த்தெடுக்காமல், முன் வைக்க அனுமதித்ததிற்கு நன்றி.


ஆம். இந்தியனுக்கு சுதந்திரவேட்கையை மூட்டியதில் காந்தி மஹானுக்கு பெரும்பங்கு உண்டு. ஆனால், அவர் தம் வாழ்க்கையின் பல வருடங்களுக்கு பிரிட்டீஷ் விசுவாசியாக இருந்தார். இந்திய சுதந்திரத்தை விழா எடுத்து அவர் கொண்டாடவில்லை. அவருடைய பேச்சும் மூச்சும் இந்தியாவின், ஏன் இவ்வுலகின், மக்களின் மனோதைர்யத்தையும், ‘இது போதும்’ என்ற பொருளியல் சிறப்பையும், அரசியல் கண்ணியத்தையும், ஆன்மிக உன்னதத்தையும், ஆணும், பெண்ணும் சரி சமானமாக, அடையவேண்டுமென, விழைந்தது. சைமன் பொலிவார், கரிபால்டி ஆகியோர் போல, அவர் ஒரு தேசாபிமானி மட்டும் அல்ல. அன்றொரு நாள், ‘நாமே நமது தேவதையாக மலர்வது’ பற்றி அப்ரஹாம் லிங்கன் கூறினார். (அவரை பற்றி ஒரு நாள் எழுதியே ஆகவேண்டும்.) ஒரு பாமர மனிதனாக ஜனித்த மோஹன் தாஸ் கரம்சந்த் காந்தி, புழுவாய் பிறந்தது வண்ணத்துப்பூச்சியாக உருவெடுத்தது போல, காந்தி மஹானாக மாறிய கதை, காதை, காப்பியம் எல்லாம் ஒரு ‘பெரிய புராணம்’. ஹோவர்ட் கார்டனர் அலசியது போல, ஒரு அருமைந்தன் தன்னை புடம் போட்டு அண்ணலாக எழுந்த வரலாறு, நம் யாவருக்கும் வாழ்வியல் பாடபுத்தகம் என்க. அதன் மூலாதாரம், அவரவர் மனம். அது பற்றியும் ஒரு நாள் விரிவாக எழுத வேண்டும். காந்திஜியை பற்றிய செய்திகள்,அவருடைய எண்ண ஓட்டங்கள் எல்லாம் முழு அளவில் இணைய தளத்தில் உள்ளது. வருடம் ஒரு நாள் அவர் ஜென்மம் எடுத்ததை கொண்டாடுவதற்கு பதிலாக, நாள் தோறும், நாம் யாவரும், ஒரு சில மணித்துளிகளை‘காந்திக் கணக்கில்’ வரவு வைத்துக்கொண்டால், நாடு கடைத்தேறும், ஐயா. உசாத்துணை பட்டியலை நோக்குக.


இனி காந்திஜி ஹிட்லருக்கு எழுதிய கடிதங்களை பற்றி:

அஹிம்சாமூர்த்தி காந்திஜி ஹிம்ஸாரணியன் ஹிட்லருக்கு கடிதம் எழுதினார் என்பதே வியப்பளிக்கிறது. பின்னணியையும் பாருங்கள். 1938ல் ஹாலிஃபாக்ஸ் பிரபு ஹிட்லருடன் அளவளாவியபோது, ஹிட்லர் இங்கிலாந்துக்கு அளித்த ஆலோசனை: ‘காந்தியை கொன்று விடவும்; அது போதாது எனில் எல்லா தலைவர்களையும் கொன்று விடவும்; அது போதாது எனில் 200 விடுதலை வீரர்களையும் கொன்று விடவும். அந்த ஹிட்லரை ‘என் நண்பரே!’ என்று கனிவுடன் விளித்து, ஜூலை 23,1939 அன்று (Complete Works, vol.70, p.20-21) எழுதுகிறார்:

‘ மனிதாபிமான அடிப்படையில் என்னை உமக்கு எழுத வேண்டுகிறார்கள், நண்பர்கள். அதை அதிகப்பிரசங்கித்தனம் என்று நினைத்து, நான் செய்யவில்லை. என் உள்மனது நான் அந்த மாதிரி கணிக்காமல், எந்த அளவுக்கு அது மதிக்கப்படுகிறதோ இல்லையோ என்றெல்லாம் யோசிக்காமல், உம்மிடம் விண்ணப்பிக்க ஆணையிடுகிறது. இன்றைய காலகட்டத்தில் போர் நிகழ்வதை தடுக்க, உங்கள் ஒருவரால் தான் முடியும். மனித குலம் அழிந்து விடுமையா? உங்களுக்கு இந்த குறிக்கோள் (நாடு பிடித்தல்) முக்யமாக இருந்தாலும், அதற்கு இந்த விலையா? இது வரை,போரிடுவதை, ஓரளவு வெற்றியுடன் எதிர்த்த என் பேச்சை கேட்ப்பீர்களா? எதற்கும், நான் எழுதுவது தவறு என்றால், முன்கூட்டியே மன்னிப்பு கோருகிறேன். தங்கள் உண்மையான ~மோ.க. காந்தி.

(ஜெர்மனி 1938 ம்யூனிச் ஒப்பந்தத்தை மீறி பொஹீமியா-மொரேவியாவை முழுங்கிய கால கட்டமிது.)


1940 வருட கிருஸ்துமஸ் விழாவுக்கு முதல் நாள் அடுத்த கடிதம். அத்தருணம் ஐரோப்பா முழுதும் ஹிட்லர், முஸோலினி மடியில். சர்ச்சில் விடாப்பிடியாக சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார். கடிதம்:

‘...நான் உம்மை நண்பரே என்று விளிப்பதின் காரணம், எனக்கு எதிரிகள் இல்லை என்பதே. கடந்த 33 வருடங்களாக, மனித குலத்தை, இனம், நிறம், மதம் போன்ற வித்தியாசங்களை புறக்கணித்து, பேணுவதிலும், மனித நேயம் நாடுவதிலும் கழித்து வந்திருக்கிறேன்... உமது தைரியத்தைப் பற்றியும், நாட்டுப்பற்றை பற்றியும் எமக்கு ஐயமொன்றுமில்லை...ஆனால்,நீங்களும், உமது ஆதரவாளர்களும் எழுதுவதும், பேசுவதும், உங்களின் பயங்கர செயல்களை பற்றியும், மனிதாபிமானத்தை குலைப்பதை பற்றியும் இம்மியளவு கூட சந்தேகம் வைக்கவில்லை. அதுவும் என் போன்ற மனித நேயம் நாடுவோர்க்க்கு, இது சரியாகவே படவில்லை. செக்கோஸ்லாவக்கியாவை தாழ்த்தினீர்கள். போலந்தை வன்புணர்ச்சி செய்தீர்கள். டென்மார்க்கை முழுங்கினீர்கள். உமக்கு இந்த கொள்ளையெல்லாம், நற்செயலாக தோன்றலாம். இதெல்லாம் இழிசெயல்கள் என்பது எங்கள் பாலபாடம்... எங்கள் நிலை தனித்தன்மை வாய்த்தது. நாங்கள் பிரிட்டீஷ் சாம்ராஜ்யபோக்கையும் எதிர்ப்பவர்கள்...’.

இந்த ரீதியில் போகிறது, கடிதம். முதல் கடிதம், துரைத்தனத்தாரால், தடுத்தாட்கொள்ளப்பட்டது. ஹிட்லருக்கு போய் சேரவில்லை. இரண்டாவதின் விதி அறியோம்.

என்ன நினைக்கிறீர்கள், அஹிம்சாமூர்த்தி ஹிம்ஸாரணியனுக்கு மடல் விடுத்ததை பற்றி?

இன்னம்பூரான்

02 10 2011

http://i51.tinypic.com/16b0pi9.jpg

16b0pi9.jpgpastedGraphic.pdf


உசாத்துணை:

Key Websites on Gandhi

1. Time Magazine

Texts on Gandhi, chosen as one of the three top leaders of the 20th century by Time Magazine, including a tribute by Nelson Mandela

http://www.time.com/time/time100/leaders/profile/gandhi.html


2. Gandhi Foundation

The most comprehensive web site on Gandhi, including 1400 photographs, several hours of audio and video, 1,500 web links and references to 8,800 books.


http://www.gandhiserve.org/index.html

***************

" நாம் யாவரும், ஒரு சில மணித்துளிகளை ‘காந்திக் கணக்கில்’

வரவு வைத்துக்கொண்டால், நாடு கடைத்தேறும், ஐயா. உசாத்துணை பட்டியலை நோக்குக. "

இப்படியெல்லாம் இடித்துரைக்க உம்மால் மட்டுமே முடியும்

என்னதான் கடிதம் எழுதினாலும் , தூது அனுப்பினாலும் பல இரணியர்கள் காதிலே வாங்க மாட்டார்கள் என்றுதானே இதிஹாச புராணங்களும் சரித்திரங்களும் நமக்கு பாடம் புகட்டினாலும் அவற்றையும் தாண்டி சாம,தான ,பேத தண்டம் என்று ஒரு வழி முறை வைத்துக்கொண்டு தடுமாறிக் கொண்டிருக்கிறோம் இன்றளவிலும்.

ஹிம்ஸாரணியன் ஹிட்லர் மட்டும் மிதித்துவிடுவாரா?

அன்புடன்

தமிழ்த்தேனீ

*

அருமையான நினைவுகள். இன்று லால்பஹாதூர் சாஸ்திரிக்கும் பிறந்த நாள். காமராஜர் மறைந்த நாள். மூன்று தேசியத் தலைவர்களின் நினைவு நாள்.

[கீதா]


No comments:

Post a Comment