Friday, March 22, 2013

ஒரு ஜனனத்தின் அஸ்தமனம்




ஒரு ஜனனத்தின் அஸ்தமனம்
1 message

Innamburan S.Soundararajan Fri, Mar 22, 2013 at 3:44 PM
To: mintamil , Manram , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , vallamai@googlegroups.com


ஒரு ஜனனத்தின் அஸ்தமனம்
Inline image 1

சில நிமிடங்களுக்கு முன் வந்த செய்தி என்னை உலுக்கி எடுத்து விட்டது. ஆம். சினுவா அசெபே (Albert Chínụ̀álụmọ̀gụ̀ Àchèbé) தனது 82வது வயதில் காலமானார். அலெக்ஸ் ஹேலியின் ‘வேர்கள்’ என்ற நூலைப் போல என்னை மிகவும் பாதித்த நூல், இவர் எழுதிய ‘உடைந்து போன ஜாமான்’ (‘Things Fall Apart’). அந்த சில மணித்துளிகளுக்குள் , உலகத்தின் எல்லா பாகங்களிலிருந்தும் இரங்கல் வந்து குவிந்தன. அவர் எழுதிய 20 நூல்களில் புதின உருவில் பாமர கீர்த்தி பரிமளித்தது. நைஜீரியாவில் எத்தனையோ மாற்றல்கள், நல்லதும்,கெட்டதுமாக, கலந்து கட்டி. ஆப்பிரிக்க இலக்கியத்தின்  பிதாமஹனான சினுவா அசெபே அவர்கள் படைத்த ஓகன்குவா என்ற விவசாயி அங்கு நிரந்தர பிரஜை. ‘உடைந்து போன ஜாமான்’ என்ற அழியாச்சுடரான நூலின் தலைமாந்தரான ஓகன்குவா கலோனிய ஆட்சிக்கு எதிர்நீச்சல் அடித்து பழமையான மரபுகளை காப்பாற்றுகிறார். ( தமிழா! கவனி.) அந்த நூல் 10 மிலியன் பிரதிகள் விற்றன. பல மொழிகளில் பிரசுரம். உலகெங்கும் பல பள்ளிகளில் பாடபுத்தகம். ஏன்? அதில் ஒரு வாய்மை (authenticity) இருந்தது. அனாயசமாக பழமொழிகளையும், தேசாபிமான கருத்துக்களையும், அடிமைத்தளை களைவதை பற்றியும் எழுதிய, அவரை பற்றி ஓரளவாவது கூற ஒரு நூலே எழுத வேண்டும். ஜோசஃப் கோன்ராட் பிரபல எழுத்தாளர். அவருடைய இனமோகத்தை சினுவா அசெபே கண்டித்ததின் விளைவாக, கான்ராடின் புகழ் மேற்கத்திய நாடுகளிலேயே மங்கியது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். தன்னுடைய தாய்நாடாகிய நைஜீரியாவின் ஊழல்களையும், திறனற்ற நிர்வாகத்தையும் கண்டித்து எழுதிய சினுவா அசெபே, அந்த அரசின் விருதுகளை நிராகரித்து விட்டவர்.
சில புகழுரைகள்: 
நெல்சன் மண்டேலா: சினுவா அசெபே ஆப்பிரிக்காவை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவர். அவருடன் இருந்தால், சிறையின் மதில்கள் சிதைந்து விடும்.
நைஜீரியன் அதிபதி குட்லக் ஜொனாதன்:  சினுவா அசெபே நைஜீரியாவின் இலக்கியத்தின் தந்தை, கலாச்சார குரு, தேசாபிமானி, கலைஞர். என்றும் எங்கள் மக்களின் மனதில் வாழும் அமரர். அவரது வாய்மை எங்களுக்கு பெருமிதம் தருகிறது...’
அவரது குடும்பம்:’  அவருடைய ஞானமும், தைரியமும் எல்லாருக்கும் ஊக்கமளித்தது.
தன்னை பற்றி சினுவா அசெபே ஒரு நேர்காணலில் 1994ல் சொன்னது: ‘ சிங்கங்களுக்கு அந்த இனத்து வரலாற்றாசிரியன் வரும் வரை, எல்லா வரலாறும் வேட்டைக்காரனின் மெய்கீர்த்தி பாடும்.’ என்று எங்கள் பழமொழி ஒன்று கூறுகிறது. அது என்னை வரலாற்று ஆசிரியனாக்கி விட்டது. நான் மட்டும் ஆசிரியன் அல்ல. எல்லாரும் கலந்து எழுதியது. வேட்டைக்காரன் எழுதியதும் வேண்டும். அப்போது தான் சிங்கத்தின் பெருமிதம், தைரியம், இன்னல்கள் எல்லாம் தெரியும்.
என் வருத்தம் எனக்கு; இரங்கல் கட்டுரை முற்றிற்று.
இன்னம்பூரான்
22 03 2013
படித்தது: பல ஊடகங்கள்


No comments:

Post a Comment