Tuesday, April 30, 2013

உன்மத்தம்: 2


உன்மத்தம்: 2
9 messages




Thu, Apr 4, 2013 at 6:33 PM
இன்னம்பூரான்

பித்தரெல்லாம் பைத்தியம் அல்ல; பைத்தியம் எல்லாம் சைத்தியம் அல்ல; சைத்தியம் எல்லாம் ‘க்ராக்’‘அல்லது ‘செமிக்ராக்’ அல்ல. பித்தமில்லா எத்தன் பத்தரைமாத்துத் தங்கம் போல அரிதிலும் அரிது. சிலருக்கு ஸ்க்ரூ ரொம்ப லூசு; பலருக்குக் கொஞ்சம் கொஞ்சம் லூசு. ஒத்தருக்குவாது ஸ்க்ரூ டைட் இல்லை. டைட் பண்ணினால், உடைந்து விடும். இது தான் நிலாவெளிச்சம் போல நிதர்சனம்.
எப்போது நமது சித்தம் நமது ஆளுமைக்குள் இல்லையோ,அதை ‘சித்தஸ்வாதீனம்’ இழந்த நிலை என்று கூறுவது வழக்கம் என்றாலும், சித்தம் நம் ஆளுமைக்குள் இருக்குமா அல்லது நாம் தான் என்றென்றும் சித்தத்தின் ஆளுமைக்குள், ஓட்டின்னுள் உறையும் ஆமையைப் போல, அடங்கி, ஒடுங்கி வாழ்நாளை கழிக்கிறோமோ என்ற சிக்கலை மனோதத்துவ சாத்திரம் இன்று வரை அவிழ்க்கவில்லை. இந்த நுட்பத்தை சிறிதேனும் புரிந்து கொண்டாலே, அவுத்துப்போட்டுட்டு அலையற அசத்துக்களுக்கும், அவதூதர்களின் ஆன்மீகத்துக்கும் உள்ள மடுவுக்கும், மலைக்கும் உள்ளது போன்ற வித்தியாசம் புலப்படும்.
உன்மத்தம் பைத்தியமோ, சைத்தியமோ இல்லை. ஆன்மீக நினைவலைகளில் மங்காது வாழும் சேஷாத்திரி ஸ்வாமிகள், ஜட்ஜ் ஸ்வாமிகள், ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், விசிறி சாமியார் போன்றோரின் வரத்துப்போக்குக்களை காணக்கொடுத்துவைத்தவர்களில் சிலர் அவர்களது சதா சர்வதா மோன நிலையை கண்டு வியந்தனர். சிலர் அவர்களின் உன்மத்த நிலையை பரிகசித்தனர்.  அவரவர் மனதின் வரையறைகளை யாரால் தாண்ட முடியும்? உயிரனங்களின் மனோதத்துவம் பற்றி மனிதன் அறிந்து கொண்டது சொற்பம். இரண்டே வரியில் அதை உரைத்து விட்டார், எங்கள் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்:
உடல் வெளுக்க வழி உண்டு எங்கள் முத்து மாரியம்மா,
மனம் வெளுக்க வழி இல்லையே எங்கள் முத்து மாரி…
`அபிநவ சுகபிரும்மம்` பிரும்மஸ்ரீ குழுமணி நாராயண சாஸ்திரிகள் எழுதிய `ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் சரித்திரம்` பற்றி உசாத்துணையில் படிக்கும் கொடுப்பினை கிடைத்தது. விருப்பம் உள்ளவர்கள்அதை முழுதும் படிப்பது நலமே.   அதிலிருந்து நன்றி நவின்று பகிர்ந்து கொள்ளும் சத்குரு அவர்களின் அதி ஆச்சரியமான உன்மத்த ஆசாரத்தைப் பற்றிய சில தகவல்கள் நான் சொல்வதை உறுதிப்படுத்துகிறது.
வம்சாவளி தெய்வ அம்சம் பொருந்தியது. ஆதி சங்கரர் புனித நர்மதை நதியின் புண்யஸ்தலத்திலிருந்து காஞ்சிக்கு வரவழைத்த தேவி உபாசகர்களின் வம்சம் என்கிறார் `அபிநவ சுகபிரும்மம்`. ஜனவரி 22, 1890 அன்று ஜனித்த சேஷாத்திரி , குழவியாக இருக்கும்போதே தொட்டதெல்லாம் பொன்  என்று கியாதி. அந்த வம்சாவளியில் ஜோதிட சாஸ்திரம் கை வந்த கலை. இவருக்கு திருமணம் பேச ஆரம்பித்தவுடனேயே ‘சந்நியாச யோகம்’ என்று சொல்லி, அது நின்று போனதால் வருந்திய விதவைத்தாய் வாடினாள்; மறைந்தும் போனாள். சேஷாத்ரியோ சதா சர்வகாலமும் பூஜை, புனஸ்காரம், கோயில், குளம். கட்டிய துணி அழுக்கு; கலைந்தத் தலைமுடி; தாடி; பளிச் குங்குமம்; தேஜோமயமான முகாரவிந்தம். ஜபதபம், அதுவும் மயானத்தில். பாலாஜி சுவாமிகள் என்பவரிடம் தீக்ஷை. இன்று கூட அவருடைய தீக்ஷாநாமம் யாருக்கும் தெரியாது. அவரைப்போய் லெளஹீகத்தில் அடைத்துப்போட்டார்கள், தந்தையின் சிரார்த்தம் செய்ய. காலி அறை. மாயமாய் மறைந்து விட்டாராம். (பகவான் ஶ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்ஸரை பற்றியும் இப்படி ஒரு செய்தி உண்டு.) ஊரெல்லாம் இந்த அற்புதம் பற்றியே பேச்சு. வீட்டுக்கே செல்லாமல், ஜீவன் முக்தராக ஞானப்பித்தராக, தன்னை உணர்ந்து பிரும்மானந்தக்கடலில் நீந்தி திளைத்தவராய் சுற்றி அலைந்து கொண்டிருந்தார். கால்நடையாகவே பல புண்யக்ஷேத்திரங்களை தரிசித்து விட்டு, திருவண்ணாமலையே கதி என்று அங்கு வந்தடைந்தார்.
“…அங்கேயே பல இடங்களில் பித்தனைப்போல சுற்றிக்கொண்டிருந்தார். அழுக்கு வேட்டி.சவரம் செய்யப்படாத முகம். கிடைத்ததை சாப்பிடுவார். சாப்பிடாமலும் இருப்பார். யாராவது புதிய வேட்டி கட்டி விட்டால், அடுத்த ஒரு மணியில் அது கந்தயாகி விட்டிருக்கும். குளக்கரை, குப்பைமேடு, எதோ ஒரு வீட்டின் திண்ணை, இப்படி எங்கு வேண்டுமானாலும் படுப்பார். பெரும்பாலும் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கம்பத்து இளையனார் கோயிலில் தான் அமர்ந்து இருப்பார் இதுதவிர, அன்ன சத்திரம், சடைச்சி ஆச்சியம்மாள் வீடு, சாதுமடம், சின்ன குருக்கள் வீடு, ஓயாமடம் போன்ற இடங்களிலும் அடிக்கடி தென்படுவார் 1889 ம் ஆண்டு தனது 19 ம் வயதில் அண்ணாமலைக்கு வந்த சுவாமிகள் நாற்ப்பது ஆண்டு காலம் அந்த புனித மண்ணில் `பைத்தியம்` போல உலவிவிட்டு தன பூத உடலை நீத்தார். அவர் அண்ணாமலையில் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல தீராத வியாதிகளும் மகானின் பார்வை பட்டதுமே பறந்தோடின. வாய் பேச முடியாதவர்கள் பேசினர். எமன் வாயில் சிக்கியவர்களைக்கூட மகான் மீட்டு இருக்கிறார்…’.
பகவான் ரமணருக்கும் (அவருக்கு ‘உந்திப்பற’ உன்மத்தம்) இவருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது, தொட்டும் தொடாமலும்.
(தொடரும்)
உசாத்துணை:

சித்திரத்துக்கு நன்றி: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHPn89-5GeCPVQe5tlXSHQIYSk9RRVl7cm-G9JRKUxwgo4pfMkvASpgCwY_1R2Cb7vjMfG4ovwUnMwa2HqVOjKILG7FH_ThSJKCUmktbnqiAYqJFCwTpw4FBTGmhzgK31tQLV9dupMtjo/s1600/EMPERUMAL+SESHAN.jpg

பிரசுரத்துக்கு நன்றி: http://www.vallamai.com/?p=34137
மேகலா இராமமூர்த்தி wrote on 2 April, 2013, 2:05
சேஷாத்திரி சுவாமிகளின் வரலாறு அற்புதம். அந்த மகான் குறித்த தகவல்களை அழகாகத் தொகுத்தளித்துள்ள இன்னம்பூரான் ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளும், பாராட்டுக்களும். தொடர்ந்து இதுபோன்ற அரிய தகவல்களை எங்களுக்கு அறியத் தாருங்கள் ஐயா.
..மேகலா
பார்வதி இராமச்சந்திரன். wrote on 2 April, 2013, 6:42ஆன்மீகத்தின் உயர்நிலையைப் பற்றிய அருமையான தொடரைத் தந்து கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய திரு.இன்னம்பூரான் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள். சேஷாத்ரி சுவாமிகளின் பெற்றோருக்கு வெகு காலம் வரை குழந்தையில்லாமல் இருந்து, அம்பிகையின் திருமுன் வேண்டிய போது,’நவநீதம் கொடு, ஞானக் கலை உதிக்கும்’ என்று அம்பிகை திருவாய் மலர்ந்தருள, அவ்வாறே நவநீதத்தை(வெண்ணை, கல்கண்டு) அம்பிகைக்கு நிவேதனம் செய்து அருந்தினர் சுவாமிகளின் பெற்றோர். அப்படி அம்பிகையின் அருட்பிரசாதமாகவே பிறந்தார் சுவாமிகள் என்று சுவாமிகளின் வரலாறு சொல்கிறது. ஞானச்செல்வர்களைப் பற்றி அறியத் தந்து கொண்டிருக்கும் திரு.இன்னம்பூரான் அவர்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

sk natarajan Fri, Apr 5, 2013 at 1:48 AM

பயன் தரும் பகிர்விற்கு நன்றி ஐயா
சேஷாத்ரி ஸ்வாமிகள் பற்றி ஏற்கெனவே அறிந்துள்ளேன்
மீண்டும் அவரைக் குறித்து அறிகையில் ஆனந்தம் அடைந்தேன் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.

C.R. Selvakumar Fri, Apr 5, 2013 at 2:14 AM

இப்பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

அருள்மிகு சேசாத்திரி சுவாமிகள் பற்றி முதலில் ஆனந்தவிகடனில் 
படித்தேன், பிறகு இரமண பகவான் அவர்களைப் பற்றிப் படித்த பொழுதெல்லாம்
இவரைப் பற்றியும் சிறிது படித்திருக்கின்றேன்.  நீங்கள் குறிப்பிடும் `அபிநவ சுகபிரும்மம்` 
எங்கு கிடைக்கும்? எத்தனையோ பெரியவர்கள்
நம்மிடையே வாழ்ந்து நாம் அறிந்தும் அறியாமலும் அருள் பொழிந்துவிட்டுப்
போயிருக்கின்றார்கள்!

அன்புடன்
செல்வா

Geetha Sambasivam Fri, Apr 5, 2013 at 7:52 AM

பரணீதரனின் "அருணாசல மஹிமையில் சேஷாத்ரி ஸ்வாமிகளைக் குறித்துப் படித்துள்ளேன்.  சென்னைக்கருகே மானம்பாக்கத்தில் சேஷாத்ரி ஸ்வாமிகளின் சீடர் ஒருவர் கட்டிய பதினெட்டு சித்தர்களின் கோயிலும் உள்ளது.  அங்கும் சென்று வந்தோம்.  அருணாசலத்திலும் பார்த்திருக்கிறோம்.  பகிர்வுக்கு நன்றி. 

Tthamizth Tthenee Fri, Apr 5, 2013 at 1:08 PM

சென்னைக்கருகே மானம்பாக்கத்தில் சேஷாத்ரி ஸ்வாமிகளின் சீடர் ஒருவர் கட்டிய பதினெட்டு சித்தர்களின் கோயிலும் உள்ளது.

தாம்பரம்
 ​ சென்று அங்கிருந்து சேலையூர் வழியாகச் சென்றால் வலது பக்கம்  மாடம்பாக்கம் என்னும் ஊர் உள்ளது 

அதில்தான் இந்த சித்தர்  கோயில் உள்ளது
அன்புடன்
தமிழ்த்தேனீ​

Innamburan S.Soundararajan Sat, Apr 6, 2013 at 7:52 AM

அன்பின் செல்வகுமார்,
நன்றி பல. இதை மன்றத்தில் பதிவு செய்ய முதலில் தயங்கினேன், பொருத்தமில்லாததாக இருந்து விடுமோ என்று. உங்கள் கருத்து இசைவாக அமைந்தது ஊக்கமளிக்கிறது. `அபிநவ சுகபிரும்மம்` பிரும்மஸ்ரீ குழுமணி நாராயண சாஸ்திரிகள் எழுதிய `ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் சரித்திரம்` பற்றி உசாத்துணையில் படிக்கும் கொடுப்பினை கிடைத்தது. மூலம் கிடைக்கவில்லை, இங்கு. உசாத்துணை நண்பரிடம் கேட்கலாம். சாஸ்திரிகள், சுவாமிகளின் அந்திமகாலத்தில் கூட இருந்த வெகு கால சிஷ்யர் என்று தெரிகிறது. மின்னாக்கம் பண்ண வேண்டிய நூல். தேடியதில் மற்றும் பல உசாத்துணை கிடைத்தன. அவற்றை பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
வணக்கம்,
இன்னம்பூரான்


C.R. Selvakumar Sun, Apr 7, 2013 at 12:11 AM

அன்புள்ள இன்னம்பூரான் ஐயா,

நீங்கள் பகிர்ந்திருந்த கருத்துகளுக்கு மிக்க நன்றி ஐயா!

அருள்கூர்ந்து எந்தத்தயக்கமும் இல்லாமல்
தமிழ் மன்றத்தில் நற்கருத்துகளைப் பகிருங்கள்.
தமிழ் மன்றத்தினர்  மகிழ்ச்சியோடும் நன்றியோடும்
உள்வாங்கிப் பயன்பெறுவர். உங்கள் பகிர்வுகளுக்கு
என் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தமிழ் மன்றத்தில் கூடிய மட்டிலும் தமிழிலே,
அதுவும் நல்ல தமிழிலே, அறிவான, 
கலைநயம் மிக்க, நல்லுணர்வு
மிக்கக் கருத்துகள் எதுவாக இருந்தாலும் (அவை
தமிழ், தமிழரைப்பற்றி,
தமிழ்நிலங்களைப் பற்றி, தமிழர் பண்பாடுகள் பற்றி 
என்று மட்டும் இன்றி எதுவாக
இருந்தாலும்) அவற்றைப் பகிர்ந்து கருத்துரையாடிப்
பயன்கொள்வதே நம் நோக்கம். எனவே தயக்கம் எதுவும்
வேண்டாம் ஐயா!

அன்புடன்
செல்வா


No comments:

Post a Comment