Sunday, June 2, 2013

இன்னம்பூரான் பக்கம் ~ 18

அப்டேட்: 09 06 2013


இன்னம்பூரான் பக்கம் ~ 18

“…தன்னை இழந்த பின் உலகை வென்று சாதிப்பது யாதும் இல்லை என்றார், ஏசு பிரான்; ‘யாதாயினும் தனக்குள்ளுறையும் வாய்மையை போற்றவும்’ என்றார் ஷேக்ஸ்பியர்.”
-Magee,Bryan (1998) The Story of Philosophy
questions
சாக்ரட்டீஸின் மனம் என்றுமே பளிங்கு நீர் போல தெளிவாக இருந்தது; அவருடன் அளவளாவுவது ஒரு புத்துணர்ச்சியை தூண்டியிருக்கும்; அவருடைய திறந்த மனம் சிந்தனையின் ஊற்று என்று சொல்வது மிகையாகாது. ப்ரையன் மாகி என்ற தத்துவ வரலாற்றாசிரியர் கூறுவது போல, ‘அன்றாட அரசியலுக்கு அப்பாற்ப்பட்ட மேதை’ என்ற வருணனைக்கு சாக்கிரட்டீஸீன் முத்திரை இலங்குகிறது. வேறு எந்த தத்துவபோதகருக்கும் இந்த உன்னதம் கிடைக்கவில்லை.
தொன்மையும், மரபும், அவை சார்ந்த சம்பிரதாயங்களும் ஆளுமை வகித்த கிரேக்க சமுதாயத்தில். சாக்கிரட்டீஸின் மேலாண்மை வெள்ளிடைமலையாகத் திகழ்ந்தது. தனிமனிதனின் யோக்கியதையை முன் நிறுத்தி, அவனுடைய மனம், உடல், சமுதாயம் சார்ந்த நடவடிக்கைகளை, அவன் தனக்கு தானே அளித்திடும் அறநெறிக்கு உட்படுத்தவேண்டும் என போதித்தவர், அவர் மட்டும் தான். அதற்கு பிறகு தான் மற்ற அதிகார மையங்களுக்கும், கடவளுக்கும் முக்கியத்துவம் என்று துணிவுடன் முன் வைத்தவர். அவர் தான். நம்முடைய நினைவில் உலவி வரும் மஹாகவி பாரதியின் புரட்சிகரமான கருத்துக்களும், அண்ணல் காந்தியின் தீண்டாமை விலக்கிய சனாதன ஹிந்து தர்மமும், சாக்கிரட்டீஸின் போதனையை தழுவியதே என்று எழுத விழைந்த போது, கண்ணில் பட்ட வாக்கியம், “…தன்னை இழந்த பின் உலகை வென்று சாதிப்பது யாதும் இல்லை என்றார், ஏசு பிரான்; ‘யாதாயினும் தனக்குள்ளுறையும் வாய்மையை போற்றவும்’ என்றார் ஷேக்ஸ்பியர்.” (Magee,Bryan (1998): பக்கம்:23)
அடுத்தப்படியாக அவர் முன் வைத்தக் கருத்து: ‘எதையும் தீர விசாரியாமல் ஏற்றுக்கொள்ளாதே. தெளிவான விளக்கங்கள் எளிதில் கிடைக்கமாட்டா. ஒவ்வொரு விடைக்கும் பின் ஒரு வினா தொக்கி நிற்கும் என்பதை மறக்காதே.’ சொல்லப்போனால், அவருடைய இந்த ‘dialectics’ எனப்படும் வினா-விடை-வினா விசாரணை பாதை இன்றளவும் உபயோகத்தில் இருக்கிறது. சில பள்ளிப்பாடங்களுக்கு உகந்த பாதை, இது தான். சகட்டுமேனிக்கு உருப்போட தகவல்களின் தொகுப்பு அளிக்க, இது பயன்படாது என்பதும் உண்மை.
தத்துவ போதனைகளில் உன்னதமான ராஜபாட்டையாக போற்றப்படும் சாக்கிரட்டீஸின் அணுகுமுறை மென்மையானது. மாணவனுக்கும், ஆசிரியனுக்கும் ஒரு அத்யந்த உறவு வேண்டும். ஆசிரியன் மாணவனை சிக்கல்களை அவிழ்க்கும் போது, அவனிடம் கருணை காட்டவேண்டும். அவனுடைய ஐயங்களை போக்கும்போது, அவனுடைய சிக்கல்களை புரிந்து கொள்ளவேண்டும். கையை பிடித்தல்லவோ அழைத்து செல்லவேண்டும் என்கிறார், சாக்கிரட்டீஸ். இது எனக்கு நினைவு படுத்துவது:
~ ஆங்கில பல்கலைக்கழகங்களில், ஒவ்வொரு மாணவனுக்கும் ட்யூட்டர் ஒருவர் உண்டு என்பதும்;
~ ‘மெண்டாரிங்’ என்ற ஆசிரிய மரபின் அதீத பயனும்;
~ தமிழ்த்தாத்தா உ.வே.சா. போன்றவர்களுக்கு மஹாவித்துவான். மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை போன்றோர் கல்வி அளித்த பண்பும்.
(தொடரும்)
Published:http://www.atheetham.com/?p=5002







Pandiyaraja Tue, Jun 4, 2013 at 11:03 AM

மிக மிக அருமை ஐயா! ரசித்துப் படித்தேன்.
>> மாணவனுக்கும், ஆசிரியனுக்கும் ஒரு அத்யந்த உறவு வேண்டும். ஆசிரியன் மாணவனை சிக்கல்களை அவிழ்க்கும் போது, அவனிடம் கருணை காட்டவேண்டும். அவனுடைய ஐயங்களை போக்கும்போது, அவனுடைய சிக்கல்களை புரிந்து கொள்ளவேண்டும். கையை பிடித்தல்லவோ அழைத்து செல்லவேண்டும் என்கிறார், சாக்கிரட்டீஸ்.
 
என்ன அருமையான கருத்து! நான் அமெரிக்கன் கல்லூரியில் பணியில் சேர்ந்தபோது எனக்குக் கொடுக்கப்பட்ட பதவி - Tutor in Mathematics. PUC மாணவர்களுக்கு அளிக்கப்படும் வீட்டுக்கணக்குகளை - திங்கள் காலை சமர்ப்பிப்பார்கள். அவற்றைச் சரிபார்த்துத் திருத்தித் தரவேண்டும். அவ்வப்போது மாணவர்கள் (PUC முதல் III B.Sc வரை) கேட்கும் சந்தேகங்களைத் தீர்த்துவைக்கவேண்டும். என் ஆரம்பகால ஆசிரியர் வாழ்வை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
ப.பாண்டியராஜா

Innamburan S.Soundararajan Tue, Jun 4, 2013 at 11:14 AM

மிக்க நன்றி, முனைவர் பாண்டியராஜா. எனக்கு உமக்கு எதிர்மறையான Tutor in Mathematics. வாய்த்ததால், நான் கணக்கு அறிவிலி ஆகிவிட்டேன். அதை பற்றி நான் எழுதிய ஆய்வுக்கட்டுரையை ராமானுஜம் கணக்கு சாத்திர மையம் பிரசுரம் செய்துள்ளது. உங்களுக்கு விருப்பமிருப்பின் அனுப்புகிறேன். உங்கள் 'அகம்' கட்டுரை களை வாசித்து மகிழ்கிறேன்.
வாழ்த்துக்கள்

இன்னம்பூரான்

Rathinam Chandramohan 
arumai



shylaja Tue, Jun 4, 2013 at 11:40 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil
ஆசிரிய மாணவ்  உறவு பற்றின  அருமையான  இடுகை.  வார்த்தை  வரிசைகள்  உங்கள் இடுகைக்கு சிறப்பு சேர்க்கிறது
[Quoted text hidden]
--
ஷைலஜா
 
//
நலமே மலரே நற்றமிழே!
நனவும் கனவும் நாயகனே
மலரின் நுனியில் பனிபோலே
மனதைச் செய்தவன் அருளாலே!
புலரும் பொழுதெனப் பலயுகமாய்ப்
புரிதற் கொன்று மில்லாமல்
இலையாய்க் காற்றில் நகர்கின்றேன்
எல்லாம் திருவடி என்றபடி!
 
திருவரங்கப்ரியா!
 ///
[Quoted text hidden]

Subashini Tremmel Tue, Jun 4, 2013 at 4:13 PM


தத்துவ போதனைகளில் உன்னதமான ராஜபாட்டையாக போற்றப்படும் சாக்கிரட்டீஸின் அணுகுமுறை மென்மையானது. மாணவனுக்கும், ஆசிரியனுக்கும் ஒரு அத்யந்த உறவு வேண்டும். ஆசிரியன் மாணவனை சிக்கல்களை அவிழ்க்கும் போது, அவனிடம் கருணை காட்டவேண்டும். அவனுடைய ஐயங்களை போக்கும்போது, அவனுடைய சிக்கல்களை புரிந்து கொள்ளவேண்டும். கையை பிடித்தல்லவோ அழைத்து செல்லவேண்டும் என்கிறார், சாக்கிரட்டீஸ். இது எனக்கு நினைவு படுத்துவது:
~ ஆங்கில பல்கலைக்கழகங்களில், ஒவ்வொரு மாணவனுக்கும் ட்யூட்டர் ஒருவர் உண்டு என்பதும்;
~ ‘மெண்டாரிங்’ என்ற ஆசிரிய மரபின் அதீத பயனும்;
~ தமிழ்த்தாத்தா உ.வே.சா. போன்றவர்களுக்கு மஹாவித்துவான். மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை போன்றோர் கல்வி அளித்த பண்பும்.
ஒரு மெண்டராக பேசிலிடேட்டராக ஆசிரியர்கள் அமைய வேண்டும் என்பதைத் தற்கால கல்வி போதனாமுறையும் வலியுறுத்துகின்றது. எனக்குத் தெரிந்து மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் கல்வி போதனா முறையில் இந்த அணுகு முறைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் கேள்வி எத்தனை ஆசிரியர்கள் தங்கள் ஈகோவை விட்டு விட்டு மாணவரை அரவணைத்துச் செல்ல தங்களைத் தயார்படுத்துக் கொண்டுள்ளார்கள் என்பதில் தான்.  மாணவரின் வளர்ச்சி மட்டுமே ஆசிரியர் மனதில் இருந்தால் தன்னைப் பின்னிலைப் படுத்தி மாணவர்  நலனை முன்னிலைப் படுத்தி செயல்படும் ஆசிரியர்கள் கிடைப்பார்கள். ஆனால் இது தற்காலத்தில் மிக மிக மிகக் குறைவாகவே உள்ளது. தான் சொல்வதை ஆமோதிக்கும், அப்படியே திரும்பிச் சொல்லும் மாணவரை விரும்பும் ஆசிரியர்கள் மாணவரின் சுய சிந்தனை வளர்ச்சிக்கு எவ்வகையிலும் உதவ முடியாது. மாறாக சிந்தனை அடிமையை உருவாக்கும் முயற்சியில் மட்டுமே வெற்றி பெறலாம்.

நல்ல தொடர்.. இப்பதிவில் உள்ள கருத்துக்கள் எனக்குப் பிடித்திருக்கின்றது. 

சுபா



தேமொழி 
///நான் எழுதிய ஆய்வுக்கட்டுரையை ராமானுஜம் கணக்கு சாத்திர மையம் பிரசுரம் செய்துள்ளது. உங்களுக்கு விருப்பமிருப்பின் அனுப்புகிறேன்.///

கட்டுரையைப் படிக்க எனக்கு ஆர்வமுள்ளது அனுப்ப இயலுமா ஐயா?

அன்புடன் 
..... தேமொழி 



Pandiyaraja Tue, Jun 4, 2013 at 4:51 PM

மிக்க நன்றி 'இ' ஐயா!
>>
 நான் எழுதிய ஆய்வுக்கட்டுரையை ராமானுஜம் கணக்கு சாத்திர மையம் பிரசுரம் செய்துள்ளது. உங்களுக்கு விருப்பமிருப்பின் அனுப்புகிறேன்
தவறாமல் உடனே அனுப்புங்கள். முதலில் அது உங்களைப் பற்றியது. அடுத்து கணக்கைப் பற்றியது.எனவே ஆர்வம் இருமடங்கு.
நன்றி,
ப.பாண்டியராஜா
 


No comments:

Post a Comment