Saturday, June 14, 2014

பனையூர் நோட்ஸ் 1: நெடுநல்வாடை

பனையூர் நோட்ஸ் 1



முன்னுரை

மும்பையிலிருந்து கொண்டு ‘பனையூர் நோட்ஸ் எழுதலாமா என்று கேட்காதீர்கள். ‘யாதும் ஊரே! யாவரும் கேளீர்...’ என்பது தானே தமிழ் பண்பு. இன்றிலிருந்து என் தாய்மொழியாகிய தமிழ் மொழியை கற்றுக்கொள்வதாக உத்தேசம். கற்றுக்கொள்வதை உடனுக்குடனே பகிர்ந்து கொள்வது சாலவும் தகும், என் வயதில்! விருப்பம் உள்ளவர்களும் சேர்ந்து கொள்ள வாய்ப்பு கிட்டும். நட்புரிமையுடன், திசை மாற்றாமல், எள்ளி குதிக்காமல் அளிக்கப்படும், ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளும் கிடைக்கலாம். லாபம் ஒண்ணு. தனித்து விடப்பட்டால், சொந்த சாஹித்யமாச்சு. லாபம் இரண்டு. ‘பனையூர் நோட்ஸ்’ என்ற தலைப்பு ஒரு நெகிழ்வியல்பு கொடுக்கிறது. ‘திக்குத் தெரியாத காட்டில் புகுந்து விளையாடலாம். லாபம் மூன்று. ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என்பது போல மனம் இழுத்துச் செல்லும் மார்க்கத்தில்  நமது யாத்திரை பயணிக்கும். அதற்கு தடையேதும் இல்லை. லாபம் நான்கு. முதல் அடி எடுத்து வைச்சாச்சு.

பனையூர் நோட்ஸ்’ எழுதச்சொன்னவர் ஒரு பகுவேடதாரி, சில மாதங்களுக்கு முன்பு: ‘சவுடால்’/ஜில் ஜில்/ நாகராஜன். நன்றி அவருக்கு; தாமதத்திற்கு சால்ஜாப்பு நமது. ஹிலேரி பெல்லாக் என்ற ஆங்கிலேய கட்டுரையாளர் எதை பற்றியும் எழுதுவார். ஒரு தலைப்பு ‘On Nothing’. நமக்கு ஒரு முன்னோடியும் கிடைச்சாச்சு. சில வருடங்களுக்கு முன்னால், அந்த தலைப்பை வைத்துக்கொண்டு ஒரு ரோட்டரி மீட்டிங்கை சமாளித்தேன். எல்லாரும் வரவேற்றார்களாம். ‘அனுபவம் பேசுகிறது’ என்று சொல்லி மார் தட்டிக்கொள்ளலாம்.

இன்னம்பூரான்
14 06 2013

  1. நெடுநல்வாடை

சங்கத்தமிழினின் பத்துப்பாடல்களில் ஒன்றாகிய 188 அடிகள் கொண்ட நெடுநல்வாடை என்ற நூலை ‘ஒரு பெருஞ்சுரங்கம்’ என்று திரு.வி.க. பாராட்டுகிறார்கள். ‘வாடை’ துன்பத்தைக் குறிக்கும். ‘நல்ல’ என்பது அன்பை குறிக்கும்; ‘நெடு’ என்பது அழியாமையை குறிக்கும்; எனவே, இது அழியாது நீடும் நல்வாடை என்ற அந்த பெருந்தகை, ‘ ஒரு சிறு புல் நுனி மருவும் ஒரு பனித்துளியிடை ஒரு பெரிய ஆலமரம் காட்சி தருவது போல சிறிய நெடுநல்வாடையில் ஒரு பெரிய உலகம், உயிர், அன்புத் தெய்வம் இவற்றின் திறன்கள் முதலியன காட்சி தருகின்றன.’ என்கிறார். இதை விட வேறு என்ன பேறு வேண்டும், நமக்கு? எனக்கு நல்லதொரு தருணம் கிட்டியது. பாண்டித்தியம் மிகுந்த தமிழாசிரியர்களால் இந்த சங்கப்பாடல் பற்றிய பாடங்கள் எடுக்கப்படும். ஆய்வுகள் முன்னிறுத்தப்படும். நான் அங்கு ஒரு மாணவன். அதற்கெல்லாம் பீடிகை தான், இங்கே.

பாடியவர் – மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
திணை – வாகை
துறை – கூதிர்ப்பாசறை
பாவகை – ஆசிரியப்பா
இன்று முதல் இரண்டு அடிகள் மட்டும்.
மழை பொழிதல்
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென (1 – 2)
தரணி தணிலே சூடு தணிந்து குளிர் பரவ, நீருண்ட மேகங்கள் உயர உயர ஏறின. புவனத்தை வளைத்தன. பொய்க்காமல் மழை பொழிந்தது. [மும்பையில் மான்ஸூன் மழைக்காக காத்திருக்கிறோம். ‘எங்கிருந்தோ வந்த’ மத்திய அரசின் பட்ஜெட்டே வருண பகவானின் கருணை பொறுத்துத் தான் அமையும். மாதுங்கா சங்கர மடத்திலே வருணஜபம் செய்தார்கள்.]
பழைய நினைவலை:
1966ம் வருடம் அந்தக்காலத்து கெரவெல் விமானத்தில் பம்பாய்-சென்னை பயணம். எட்டிப்பார்த்தால் பல மாடிகளுக்கு அடுக்கடுக்காய், கெட்டியாய், பஞ்சு மிட்டாய் போல இருந்தாலும், ஒரு நெகிழ்வியல்பு, ஆபரணமணியா, ஆலை குலைந்து நின்ற குதும்பாய் போல! நீருண்ட கார்மேகங்களுக்கு, நிமிடமொரு மேனியாக, வினாடியொரு அங்கமாக, மேகதூதம் விரைந்து விரைந்து நடந்து கொண்டிருந்தது. நெஞ்சம் மறக்கவில்லை.
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென (1 – 2)
இப்போது புரிகிறது.
விட்டேனே, அத்துடன்? மஹாகவி பாரதியை நினைத்துக்கொண்டேன். 
புயற்காற்று
(நள வருஷம் கார்த்திகை 8-ம் தேதி (1916-17) புதன்கிழமை இரவு.)
ஒரு கணவனும் மனைவியும்:
மனைவி: காற்றடிக்குது, கடல் குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகனே!
தூற்றல் கதவு சாளர மெல்லாம்
தொளைத் தடிக்குது பள்ளியிலே.

கணவன்: வானம் சினந்தது; வையம் நடுங்குது
வாழி பராசக்தி காத்திடவே!
தீனக் குழந்தைகள் துன்பப் படாதிங்கு
தேவி அருள்செய்ய வேண்டுகின்றோம்.

மனைவி: நேற்றிருந் தோம் அந்த வீட்டினிலே, இந்த
நேர மிருந்தால் என்படுவோம்?
காற்றென வந்தது கூற்றமிங்கே, நம்மைக்
காத்தது தெய்வ வலிமை யன்றோ!

மழை

திக்குக்கள் எட்டும் சிதறி தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து வெள்ளம்
பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட
தக்கத் ததிங்கிடதித்தோம் - அண்டம்
சாயுது சாயுது சாயுது - பேய்கொண்டு
தக்கையடிக்குது காற்று - தக்கத்
தாம்தரிகிடத்தாம் தரிகிடதாம் தரிகிடதாம் தரிகிட
வெட்டி யடிக்குது மின்னல், கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்; - கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று
தாளங் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையும் இடிய - மழை
எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!
அண்டம் குலுங்குது, தம்பி! - தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்; - திசை
வெற்புக் குதிக்குது; வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்; - என்ன
தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம், கண்டோம் - இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!

மஹாகவியின் இந்த பாடலுக்கு, இடம், பொருள், ஏவல் உளது. யாராவது ஆயிரம் பேர் கேட்டால், பார்க்கலாம்.

அன்புடன்,
இன்னம்பூரான்
14 06 2014

குறிப்புகள் எடுத்துக்கொள்ள, இவை உதவும்; மற்றும் பல உள.
  1. உ.வே.சா. பதிப்பு (மூன்றாவது பிரசுரம்: 1931): https://archive.org/stream/TamilNedunalvadai/book-Tamil-Nedunalvadai-Nachchi-Uvesa-1909#page/n0/mode/1up
2. சில்லென்று ஒரு காதல் (நெடுநல்வாடை: எளிய வடிவில்) - மின்னூல் - என். சொக்கன்



சித்திரத்துக்கு நன்றி: http://cache2.asset-cache.net/gc/AD3992-002-layer-of-dense-cumulonimbus-clouds-gettyimages.jpg?v=1&c=IWSAsset&k=2&d=Fo5uDjh7ejCZ0DTbbB0Qm6MPwYbIRBpMiG4xh9IVA0U%3D

No comments:

Post a Comment