Wednesday, June 18, 2014

பனையூர் நோட்ஸ் 4 நெடுநல்வாடை 4


பனையூர் நோட்ஸ் 4
இன்னம்பூரான்
18 06 2013

 நெடுநல்வாடை  4

‘... ‘எங்கிருந்தோ வந்து இடைச்சாதி நான் என்ற’  குடை பிடித்த மஹானுபாவன்.  இது மற்றொரு உருவகம். அது பற்றி அடுத்த இழையில் பார்ப்போமா?/ பெரியாழ்வார் அருளிச்செய்யும் உருவகம் நோக்குக. “மதயானைபோலெழுந்த மாமுகில்காள்” என்கிறார். கோவர்த்தனம் கவளமாகிறது. அர்ஜுனனின் சாரதி, இங்கே யானை பாகன்...
[தொடருகிறது]
நெடுநல்வாடையில் கூறப்படும் ‘கூதிர்க்காலத்தின் தன்மை’ பற்றி நான்கு வரி எழுதுவதற்குமுன் சில வார்த்தைகள். நான் தான் சொல்லி விட்டேனே! meandering இவ்விழையின் இயல்பு என்று.

கிருஷ்ணனை புகழ்ந்து விட்டு இராமனை விடுவார்களோ, நினைவில் இருக்கும் ரசிகமணி அவர்களின் குறிப்பின் வாசகம் கிடைக்க வில்லை என்றாலும்! அது அபராதமல்லவோ! அதா அன்று!  தேமொழியும், கீதா மதிவாணனும் அளித்த கீழ்க்கண்ட விளக்கமே, எம்மை ஶ்ரீராமசந்திர மூர்த்தியிடம் அழைத்துச்செல்லும் நன்நிமித்தமென்க.

{“...கூதிர்காலப் பாசறை அமைத்துப் போர் புரியச் சென்றிருக்கிறான்  இப்பாடலின் நாயகன் பாண்டியன்  நெடுஞ்செழியன்.  காதல் கணவனை எதிர்பார்த்து தனிமைத் துயரில் தவிக்கும் அவன் மனைவிக்கு  வாடைக்காலம் நெடியவாடையாகத் தெரிந்ததாம்.  தலைவனுக்கோ கடமையுணர்வின் மேலீட்டால் வெற்றி பெறவிருக்கும் நோக்கில் இருந்ததால் அவ்வாடை நல்வாடையாயிற்றாம். ஒரே காலம் இருவருக்கும் இருவேறு மனநிலையைத் தந்ததால் இதற்கு நெடுநல்வாடை என்ற பெயராம்.  [ ref: http://geethamanjari.blogspot.com/2013/05/blog-post.html }

ரசிகமணி டி.கே.சி. அவர்களின் ரசனையை தேடி களைத்து விட்டேன். அது பற்றி நான் மின் தமிழில் எழுதியது கூட கிடைக்கவில்லை.  அதனால், என் மனதில் பட்டதை எழுதத் துணிந்தேன்.
போரும் பாசறையும் புறத்திணை. உள்ளமெனும் அகம்வாழ்- துணையாக திகழ்பவளோ, எங்கோ இருக்கும் அசோக வனத்தில் இற்செறிக்கப்பட்டு வாடி இருக்கும் சீதா தேவி. அகம் தழுவிய புறம் தரும் அரும் காட்சியை - யுத்த காண்டத்தின் கடல் காண் படலத்தில் கம்ப நாட்டான் தரும் சொற்றலங்காரத்தையும் அது தரும் சித்திரக்காட்சியையும் - காண்போமாக.  

பொங்கிப் பரந்த பெருஞ் சேனை, புறத்தும் அகத்தும், புடை சுற்ற-
சங்கின் பொலிந்த தகையாளைப் பிரிந்த பின்பு, தமக்கு இனம் ஆம்
கொங்கின் பொலிந்த தாமரையின் குழுவும் துயில்வுற்று இதழ் குவிக்கும்
கங்குல் பொழுதும், துயிலாத கண்ணன் - கடலைக் கண்ணுற்றான். 
2 கடல்காண் படலம்.
....
'தூரம் இல்லை, மயில் இருந்த சூழல்' என்று மனம் செல்ல,
வீர வில்லின் நெடு மானம் வெல்ல, நாளும் மெலிவானுக்கு,-
ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு?-ஏழை
மூரல் முறுவல் குறி காட்டி, முத்தே! உயிரை முடிப்பாயோ? 
7 கடல்காண் படலம்.

யுத்தத்திற்கும் ஆயத்தம் ஆகிவருகிறார்கள், ஒரு பெருஞ்சேனை. வானரசேனையல்லவா! ஆயத்தத்தின் யத்தனம் அவர்களின் ஆர்பாட்டங்களில் தெரிகிறது. ‘புறத்தும் அகத்தும் என்றார், கம்பர். கடலோரம் அல்லவா! கூதிர்பாசறையில் தனித்திருந்து மருகும் இராமனுக்கு தூக்கம் வரவில்லை. துயிலாத கண்ணன் தென்திசை-கடலை கண்ணுற்றான், என்றார், கம்பர். இதுவரை புறத்திணை. அவன் கடலை நோக்கும்போது, அவன் மனக்கண்ணில் வலம் வந்தது என்னமோ, சங்கு வளை அணிந்திருந்த ‘சீதா பிராட்டி’ [இது கம்பரின் சொல்.] இதற்கு மிஞ்சிய அகத்திணை/துணை யாது அய்யா? மயில்  போன்ற சீதாபிராட்டி இருந்த  இடம் நெடுந்தூரமில்லை என்று அகம்  சொல்லிற்று. விரகதாபத்தால் நாளுக்கு நாள் உடல் மெலிந்து வரும் இராமனை, ‘சடக்’ என்று புறத்திணை தடுத்தாட்கொண்டது; தன்மானம் தலைக்கேறியது. வில்லின் நாணும் முறுக்கேற்றிக் கொண்டது.  ‘ஏழை மூரல் முறுவல் குறி காட்டி, முத்தே! உயிரை முடிப்பாயோ?’ என்று மறுபடியும், அகம். அதாவது, சீதாபிராட்டியின் புன்முறுவல் ‘வாட்டர் மார்க்காக’ அகம் ஆண்டது. எழுந்த வினா: அந்த இலங்கை  அரக்கர்களுடனே உனக்கு என்ன உறவு இருக்கிறது? கூதிர் பாசறையில் அகமும், புறமும் மாற்றி மாற்றி இராமனை  ‘to be or not to be’ என்ற கவலையில் ஆழ்த்தினவோ! நெடுநல்வாடையின் கூதிர்காலம் பெரியாழ்வாரிடமும், கம்பநாட்டானிடமும் இழுத்துச்சென்றால், நானா பிணை? நெடுல்வாடைக்கு திரும்புவோம்.

கூதிர்க்காலத்தின் தன்மை
நாங்கள் காஷ்மீர் போயிருந்த போது, நண்பர்களின் உதவியால், ஊர்சுற்றிகள் போகாத இடங்கள் எல்லாம் போய் ஆனந்தத்துடன் பார்க்க முடிந்தது. அப்படிப்பட்ட காட்சி ஒன்று: ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆடுகள் கொண்ட பல ஆட்டுமந்தைகளை, படை போல் திரண்டிருந்த இடையர்கள் மேயவிட்டுக்கொண்டு, மலைகளையும் பள்ளத்தாக்குகளையும், அசகாயமாகக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். போக வர பல மாதங்கள் ஆகுமாம். சோத்துக்கடை, பாக சாலை, உக்கிராணம் முதற்கொண்டு பலமான முன்னேற்பாடுகள். சற்று தூரம் அவர்களுடன் நடந்த பின் தான் யாதவ குல உன்னதம் தென்பட்டது. அதே மாதிரி, வெப்பம் தவிர்க்க, புல்தரைகள் நாடி, நூற்றுக்கணக்கான மாடுகள் வருடாவருடம்  கச் பிராந்தியத்திலிருந்து தெற்கு குஜராத் நோக்கி புலன் பெயர்வதையும் பார்த்துத் திகைத்தோம். நெடுநல்வாடையின் கூதிர்க்காலத்தின் தன்மை, அதை நினைவுக்கு கொண்டு வைத்தது. 
நெடுநல்வாடையில் விவரிக்கப்படும் காலமோ குளிர்காலம். இருப்பதோ கடலோரம். அடிக்கிறதோ ஊதற்காற்று. ஒரே ஈரபதம். ஆதவன் அஸ்தமித்து, இருள் சூழ்ந்து கொண்டது. பனி மழை. குளிர் தாங்கவில்லை. ஆடுமாடுகள் மேய்வதை மறந்து விட்டன. பெண் குரங்குகள் (மந்தி) கோணாமாணா என்று உடலை வருத்திக்கொண்டன. புட்கள் மரக்கிளைகளிலிருந்து வீழ்ந்தன. தாங்கொண்ணா சினம், குளிர் தாங்காமல். அதனால், ஆவினம் பால் குடிக்கும் கன்றுகளை உதைத்து விரட்டின. ஐயகோ! என்ன குளிரடா! மலையை உறைய வைக்கும் போல் இருக்கிறதே.
மா மேயல் மறப்ப மந்தி கூர
பறவை படிவன வீழக் கறவை
கன்று கோள் ஒழியக் கடிய வீசி
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் (9 – 12 நெடுநல்வாடை)
மா – கால்நடை/ மேயல் மறப்ப – மேய மறந்து போய்/ மந்தி கூர – பெண் குரங்குகள் உடலை வளைத்து/பறவை படிவன வீழ – பறவைகள் இருக்கையிலிருந்து விழ/ கறவை – ஆவினம்/கன்று கோள் ஒழிய –பால் குடிக்கும் கன்றுகளை உதைத்து/  கடிய – கோபத்தில்/, வீசி –வீசி/குன்று குளிர்ப்பன்ன –மலையை உறைய வைக்கும்/ கூதிர்ப் பானாள் – குளிர் நள்ளிரவுகள்.
உசாத்துணை: கம்பராமாயணம்; எமது ’அகம்’ முன் கொணர்ந்தது; டி.கே.சி.யின் ரசனை.
சித்திரத்துக்கு நன்றி.http://www.noolulagam.com/book_images/6020.jpg

-#-

No comments:

Post a Comment