Wednesday, June 18, 2014

பனையூர் நோட்ஸ் 4 நெடுநல்வாடை 4


பனையூர் நோட்ஸ் 4
இன்னம்பூரான்
18 06 2013

 நெடுநல்வாடை  4

‘... ‘எங்கிருந்தோ வந்து இடைச்சாதி நான் என்ற’  குடை பிடித்த மஹானுபாவன்.  இது மற்றொரு உருவகம். அது பற்றி அடுத்த இழையில் பார்ப்போமா?/ பெரியாழ்வார் அருளிச்செய்யும் உருவகம் நோக்குக. “மதயானைபோலெழுந்த மாமுகில்காள்” என்கிறார். கோவர்த்தனம் கவளமாகிறது. அர்ஜுனனின் சாரதி, இங்கே யானை பாகன்...
[தொடருகிறது]
நெடுநல்வாடையில் கூறப்படும் ‘கூதிர்க்காலத்தின் தன்மை’ பற்றி நான்கு வரி எழுதுவதற்குமுன் சில வார்த்தைகள். நான் தான் சொல்லி விட்டேனே! meandering இவ்விழையின் இயல்பு என்று.

கிருஷ்ணனை புகழ்ந்து விட்டு இராமனை விடுவார்களோ, நினைவில் இருக்கும் ரசிகமணி அவர்களின் குறிப்பின் வாசகம் கிடைக்க வில்லை என்றாலும்! அது அபராதமல்லவோ! அதா அன்று!  தேமொழியும், கீதா மதிவாணனும் அளித்த கீழ்க்கண்ட விளக்கமே, எம்மை ஶ்ரீராமசந்திர மூர்த்தியிடம் அழைத்துச்செல்லும் நன்நிமித்தமென்க.

{“...கூதிர்காலப் பாசறை அமைத்துப் போர் புரியச் சென்றிருக்கிறான்  இப்பாடலின் நாயகன் பாண்டியன்  நெடுஞ்செழியன்.  காதல் கணவனை எதிர்பார்த்து தனிமைத் துயரில் தவிக்கும் அவன் மனைவிக்கு  வாடைக்காலம் நெடியவாடையாகத் தெரிந்ததாம்.  தலைவனுக்கோ கடமையுணர்வின் மேலீட்டால் வெற்றி பெறவிருக்கும் நோக்கில் இருந்ததால் அவ்வாடை நல்வாடையாயிற்றாம். ஒரே காலம் இருவருக்கும் இருவேறு மனநிலையைத் தந்ததால் இதற்கு நெடுநல்வாடை என்ற பெயராம்.  [ ref: http://geethamanjari.blogspot.com/2013/05/blog-post.html }

ரசிகமணி டி.கே.சி. அவர்களின் ரசனையை தேடி களைத்து விட்டேன். அது பற்றி நான் மின் தமிழில் எழுதியது கூட கிடைக்கவில்லை.  அதனால், என் மனதில் பட்டதை எழுதத் துணிந்தேன்.
போரும் பாசறையும் புறத்திணை. உள்ளமெனும் அகம்வாழ்- துணையாக திகழ்பவளோ, எங்கோ இருக்கும் அசோக வனத்தில் இற்செறிக்கப்பட்டு வாடி இருக்கும் சீதா தேவி. அகம் தழுவிய புறம் தரும் அரும் காட்சியை - யுத்த காண்டத்தின் கடல் காண் படலத்தில் கம்ப நாட்டான் தரும் சொற்றலங்காரத்தையும் அது தரும் சித்திரக்காட்சியையும் - காண்போமாக.  

பொங்கிப் பரந்த பெருஞ் சேனை, புறத்தும் அகத்தும், புடை சுற்ற-
சங்கின் பொலிந்த தகையாளைப் பிரிந்த பின்பு, தமக்கு இனம் ஆம்
கொங்கின் பொலிந்த தாமரையின் குழுவும் துயில்வுற்று இதழ் குவிக்கும்
கங்குல் பொழுதும், துயிலாத கண்ணன் - கடலைக் கண்ணுற்றான். 
2 கடல்காண் படலம்.
....
'தூரம் இல்லை, மயில் இருந்த சூழல்' என்று மனம் செல்ல,
வீர வில்லின் நெடு மானம் வெல்ல, நாளும் மெலிவானுக்கு,-
ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு?-ஏழை
மூரல் முறுவல் குறி காட்டி, முத்தே! உயிரை முடிப்பாயோ? 
7 கடல்காண் படலம்.

யுத்தத்திற்கும் ஆயத்தம் ஆகிவருகிறார்கள், ஒரு பெருஞ்சேனை. வானரசேனையல்லவா! ஆயத்தத்தின் யத்தனம் அவர்களின் ஆர்பாட்டங்களில் தெரிகிறது. ‘புறத்தும் அகத்தும் என்றார், கம்பர். கடலோரம் அல்லவா! கூதிர்பாசறையில் தனித்திருந்து மருகும் இராமனுக்கு தூக்கம் வரவில்லை. துயிலாத கண்ணன் தென்திசை-கடலை கண்ணுற்றான், என்றார், கம்பர். இதுவரை புறத்திணை. அவன் கடலை நோக்கும்போது, அவன் மனக்கண்ணில் வலம் வந்தது என்னமோ, சங்கு வளை அணிந்திருந்த ‘சீதா பிராட்டி’ [இது கம்பரின் சொல்.] இதற்கு மிஞ்சிய அகத்திணை/துணை யாது அய்யா? மயில்  போன்ற சீதாபிராட்டி இருந்த  இடம் நெடுந்தூரமில்லை என்று அகம்  சொல்லிற்று. விரகதாபத்தால் நாளுக்கு நாள் உடல் மெலிந்து வரும் இராமனை, ‘சடக்’ என்று புறத்திணை தடுத்தாட்கொண்டது; தன்மானம் தலைக்கேறியது. வில்லின் நாணும் முறுக்கேற்றிக் கொண்டது.  ‘ஏழை மூரல் முறுவல் குறி காட்டி, முத்தே! உயிரை முடிப்பாயோ?’ என்று மறுபடியும், அகம். அதாவது, சீதாபிராட்டியின் புன்முறுவல் ‘வாட்டர் மார்க்காக’ அகம் ஆண்டது. எழுந்த வினா: அந்த இலங்கை  அரக்கர்களுடனே உனக்கு என்ன உறவு இருக்கிறது? கூதிர் பாசறையில் அகமும், புறமும் மாற்றி மாற்றி இராமனை  ‘to be or not to be’ என்ற கவலையில் ஆழ்த்தினவோ! நெடுநல்வாடையின் கூதிர்காலம் பெரியாழ்வாரிடமும், கம்பநாட்டானிடமும் இழுத்துச்சென்றால், நானா பிணை? நெடுல்வாடைக்கு திரும்புவோம்.

கூதிர்க்காலத்தின் தன்மை
நாங்கள் காஷ்மீர் போயிருந்த போது, நண்பர்களின் உதவியால், ஊர்சுற்றிகள் போகாத இடங்கள் எல்லாம் போய் ஆனந்தத்துடன் பார்க்க முடிந்தது. அப்படிப்பட்ட காட்சி ஒன்று: ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆடுகள் கொண்ட பல ஆட்டுமந்தைகளை, படை போல் திரண்டிருந்த இடையர்கள் மேயவிட்டுக்கொண்டு, மலைகளையும் பள்ளத்தாக்குகளையும், அசகாயமாகக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். போக வர பல மாதங்கள் ஆகுமாம். சோத்துக்கடை, பாக சாலை, உக்கிராணம் முதற்கொண்டு பலமான முன்னேற்பாடுகள். சற்று தூரம் அவர்களுடன் நடந்த பின் தான் யாதவ குல உன்னதம் தென்பட்டது. அதே மாதிரி, வெப்பம் தவிர்க்க, புல்தரைகள் நாடி, நூற்றுக்கணக்கான மாடுகள் வருடாவருடம்  கச் பிராந்தியத்திலிருந்து தெற்கு குஜராத் நோக்கி புலன் பெயர்வதையும் பார்த்துத் திகைத்தோம். நெடுநல்வாடையின் கூதிர்க்காலத்தின் தன்மை, அதை நினைவுக்கு கொண்டு வைத்தது. 
நெடுநல்வாடையில் விவரிக்கப்படும் காலமோ குளிர்காலம். இருப்பதோ கடலோரம். அடிக்கிறதோ ஊதற்காற்று. ஒரே ஈரபதம். ஆதவன் அஸ்தமித்து, இருள் சூழ்ந்து கொண்டது. பனி மழை. குளிர் தாங்கவில்லை. ஆடுமாடுகள் மேய்வதை மறந்து விட்டன. பெண் குரங்குகள் (மந்தி) கோணாமாணா என்று உடலை வருத்திக்கொண்டன. புட்கள் மரக்கிளைகளிலிருந்து வீழ்ந்தன. தாங்கொண்ணா சினம், குளிர் தாங்காமல். அதனால், ஆவினம் பால் குடிக்கும் கன்றுகளை உதைத்து விரட்டின. ஐயகோ! என்ன குளிரடா! மலையை உறைய வைக்கும் போல் இருக்கிறதே.
மா மேயல் மறப்ப மந்தி கூர
பறவை படிவன வீழக் கறவை
கன்று கோள் ஒழியக் கடிய வீசி
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் (9 – 12 நெடுநல்வாடை)
மா – கால்நடை/ மேயல் மறப்ப – மேய மறந்து போய்/ மந்தி கூர – பெண் குரங்குகள் உடலை வளைத்து/பறவை படிவன வீழ – பறவைகள் இருக்கையிலிருந்து விழ/ கறவை – ஆவினம்/கன்று கோள் ஒழிய –பால் குடிக்கும் கன்றுகளை உதைத்து/  கடிய – கோபத்தில்/, வீசி –வீசி/குன்று குளிர்ப்பன்ன –மலையை உறைய வைக்கும்/ கூதிர்ப் பானாள் – குளிர் நள்ளிரவுகள்.
உசாத்துணை: கம்பராமாயணம்; எமது ’அகம்’ முன் கொணர்ந்தது; டி.கே.சி.யின் ரசனை.
சித்திரத்துக்கு நன்றி.http://www.noolulagam.com/book_images/6020.jpg

-#-

Monday, June 16, 2014

பனையூர் நோட்ஸ் 3: நெடுநல்வாடை 3

பனையூர் நோட்ஸ் 3

இன்னம்பூரான்
17 06 2013

 நெடுநல்வாடை  3
[தொடருகிறது]
‘எங்கிருந்தோ வந்து இடைச்சாதி நான் என்ற...’  குடை பிடித்த மஹானுபாவன்.  இது மற்றொரு உருவகம். அது பற்றி அடுத்த இழையில் பார்ப்போமா?...
ஓ! கோவர்த்தன கிரிதாரி என்ற சேவகனை பார்ப்போமே. நெடுநல்வாடை, நம்மை ஆய்ப்பாடி யாதவ குல சத்குருவிடம் எடுத்துச் சென்று விட்டு வரட்டுமே. எங்கிருந்து வந்தான், அவன்? கொடுங்கோலன் கம்சனின் காராகிருஹத்திலிருந்து புலன் பெயர்ந்தவன் அல்லவோ! அவன் தானே,  
யானும் இடர்மிகுந்து வாடுகையில், எங்கிருந்தோ வந்து ‘இடைச்சாதி நான்; மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களைநான் காத்திடுவேன்...’ என்றான்; மற்றம் பல சொன்னான், அந்த பண்டைக் காலத்துப் பயித்தியம். அதற்கென்ன இப்போ? அந்த சாரதியை பற்றி பாரதி சொல்லாததா? யாராவது கேட்டா, பாத்துக்கலாம். கேட்டுச்சொன்னால் தானே சுவை. தனக்குதானே ஆலாபனை செய்து மகிழ, அல்ட்ரா சவுண்டு எதுக்குச் சாமி?
‘...உருமிடியும் மின்னும் மிகையான பூதமலையும் அஞ்சிடும்...’ இடி முழங்கி, மின்னல் பளிச்சிட, உறுமிக்கொண்டு அலைந்து வரும் நீருண்ட மேகங்கள் பொழியும் மழை படுத்தும் பாடு: ஆவினம் பீதியில் உறைந்த மாதிரி, உடல் நனைந்த உபாதையினாலும் இன்னல்களின் உபத்ரவம் தாங்காமலும் , தவிக்கின்றன. இடைச்சாதி மகளிர் நனைந்த உடையினால், நாணமிகுந்து, தலை குனிந்தனர். கண்ணபிரான் கோவர்த்தன கிரியையே பரந்த வெண்குடையாக தூக்கிப்பிடித்து, ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்பதற்கிணங்க, லோக சம்ரக்ஷணம் செய்கிறார். அதற்கு பெரியாழ்வார் அருளிச்செய்யும் உருவகம் நோக்குக. “மதயானைபோலெழுந்த மாமுகில்காள்” என்கிறார். கோவர்த்தனம் கவளமாகிறது. அர்ஜுனனின் சாரதி, இங்கே யானை பாகன்.

கடுவாய்ச் சினவெங் கண்களிற் றினுக்குக் கவள மெடுத்துக் கொடுப்பா னவன்போல்
அடிவா யுறக்கை யிட்டுஎழப் பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டுநின் றமலை
கடல்வாய்ச் சென்றுமே கம்கவிழ்ந் திறங்கிக்கதுவாய்ப் படநீர் முகந்தே றிஎங்கும்
குடவாய்ப் படநின் றும ழை பொழியும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.

நான் யார் பெரியாழ்வார் பாசுரத்துக்குப் பாடம் எடுப்பது. தாரதம்யம் இல்லையோ, இப்பூவலகில்?கோஹினூர் வைரமிருக்க, ரங்கோன் டயமண்டுக்கு அலைவரோ? அபரஞ்சி தஙமிருக்க, கில்ட் நகை அணியலாமோ? நிதானமாக படியுங்கோ. ‘தத்துப்பித்து’ சொல்றமாதிரி, இது கம்பைய்ண்ட் ஸ்டடி அல்லவோ!
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கண்ணபிரான் மேகமழையைத் தடுப்பதற்காக மலையை உயரத் தூக்கிக்கொண்டு நின்றபடிக்கு ஓர் உவமை கூறுகின்றார் - முதலடியினால்; மேகத்தை யானையாகவும் மலையைக் கவளமாகவும், அம்மலையையெடுத்துப் பிடிக்கின்ற கண்ணனைக் கவளமெடுத்துக் கொடுக்கும் பாகனாகவும் உருவகப்படுத்தியவாறு: “மதயானைபோலெழுந்த மாமுகில்காள்”  எனப் பிறவிடத்தும் மேகத்துக்கு யானையை உவமையாகக் கூறியுள்ளமை காண்க.  கடுவாய், சினம், வெங்கண் என்ற இம்மூன்றடைமொழிகளும் மேகத்துக்கும் இயையும்; கேட்டார் அஞ்சும்படியான முழக்கமும், அடர்த்துக்கொண்டு வர்ஷிக்கநிற்கிற ஆக்ரஹமும், கொள்ளிவட்டம் போன்ற மின்னற்சுழிப்பும் அமையப்பெற்றிருக்குமிறே மேகங்கள்.  கடு - ?? என்ற வடசொல்விகாரம்.  கவளம் - ???. யானையின் உணவு.  (அடிவாய் இத்யாதி) ஒருதிருக்கையை மலையின் கீழ்ச் செலுத்தி மற்றொரு திருக்கையை மலையின் மேற்செலுத்திப் பறித்தெடுத்தானென்க.  அடிவாய் - அடியிலே; வாய் - ஏழனுருபு. உற - ஊன்றும்படி.  மேகங்களானவை திருவாய்ப்பாடியெங்கும் மழையைப் பொழிந்து வருத்த, அதனைத் தொலைப்பதற்காகத் தூக்கினகுடையாமென்பது - பின்னடிகளின் கருத்து.  கதுவாய்ப்படுதலாவது - குறைவுபடுதல்; எனவே, கடன் வெறுந்தரையாம்படி என உரைக்கப்பட்டது; வேறுவகையாகவுமுரைக்கலாம்.
உபயம்: http://dravidaveda.org

குறிப்பு: அங்கேயும், இங்கேயும் சஞ்சாரம் பண்ணுவதிலே தான் ருசி. எல்லை கடந்த பாடம். ‘கலாநிதி’ க.  கைலாசபதி அவர்களின் ஒப்பியல் இலக்கிய பாடமும் ஒரு முன்மாதிரி தானே.  அதான், அன்றே சொல்லி விட்டேனே, ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’!

-#-

போன மச்சான்...

போன மச்சான்...
இன்னம்பூரான்
16 06 2014
மச்சான்களில் பலவிதம். சிலர் போகவும் மாட்டார்கள்; போனால் வரவும் மாட்டார்கள். சிலர் பிகு மாஸ்டர்கள்.  தாம்பூலம் வைத்து அழைத்தால் தான் வருவார்கள். சிலர் கூப்பிடாவிட்டாலும், வந்துத் தொலைப்பார்கள். போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு என்ற ரகமும் உண்டு.  மாற்றான் வீட்டு தோட்டத்துப் பூவா? என்று கேட்டு, என்னை மாட்டி விடாதீர்கள். மட்டறுத்து விடுவார்கள். ஆமாம். சொல்லிப்போட்டேன். எதையோ எழுத வந்து விட்டு எதையோ எழுதறேன்!
ஐயெஸீ 3 [ISEE-3: International Sun-Earth Explorer-3] என்றொரு விண்கலம், மண்கலமாகப்போறது, 36 வருடங்கள் பிரபஞ்ச சஞ்சாரம் செய்த பிறகு. 
பயோ-டாட்டா: 

தோற்றம் 1978: தாயுமானவர் நாஸா. ஊழியங்கள் பல. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே மெட்ரோ
மாதிரி வரத்துப்போக்கு. சூர்யோவாயு பற்றி தகவல் சேகரிப்பு, தடம் மாறி நிலவு தரிசனம், செப்டம்பர் 1985ல் ஜியகோபினி-ஜின்னர் என்ற வால் நக்ஷத்திரத்தின் வாலுருவதல் போன்ற பணிகள், பின்னர் போல்டாக, மறுபடியும் கிறுபடியும் கிரகசஞ்சாரம். நாஸா பிரகடனித்த ஓய்வு 1997. பிறகு, என் மாதிரி ஊர் சுற்றல். சும்மா. 1997லிருந்து கதிரவ பிரதக்ஷிணம். உலகம் நோக்கி  யாத்திரை, இப்போது. இரண்டு மாதத்தில் நெருங்கி விடும். மதியில்லாததால், மதியுடன் மோதிடுமோ என்ற அச்சம் இருக்கிறது. பின்னர் தடம் மாறி, திக்கு தெரியாமல் சூரியனை வலம் வந்து கொண்டிருக்குமோ என்ற ஐயமும் இருக்கிறது. என்ன பிரச்னை? சிக்கல் யாதும் இல்லை. ஆரோக்யமாகத்தான் இருக்கிறது. ஆனால் வழி நடத்தல் கையேடு [ஆபரேட்டிங் மேன்யுவல்] இல்லையே. {முனைவர் நா.கா., த.ம. அ.விடம் சொல்லியிருந்தால், மின்னாக்கம் செய்து வச்சுருப்போம் இல்லை!]
ஆபத்பாந்தவனாக வந்து இருப்பது, மிஸ்டர்.டென்னிஸ் விங்கோ என்ற ஆகாசகங்கை இஞ்சினீயர். மூடப்பட்ட ஒரு மக்டெனால்ட் சாப்பாட்டுக்கடை யிலிருந்து சக்கை போடு போடும் ஸ்கைக்கோர் கம்பெனி தான் அவருக்கு கை கொடுக்கிறது. சாண் கையில் முழம் அளக்கும் விந்தை மனிதரவர். போறப்போக்கை பார்த்தால், விண்கலத்தை மண்ணில் இறக்கிடுவாங்க போல் இருக்கு.
எல்லாரும் ஜோரா கை தட்டுங்கோ. ஐயெஸீ 3 மண்கலமானவுடன், சவுடால் பொருத்தமாக, ஒரு பாட்டுப்போடுவார். 
-#-
தகவல் உபயம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா 16 06 2014

சித்திரத்துக்கு நன்றி: http://yournewsticker.com/wp-content/uploads/2014/05/NASA-ISEE-3-1.jpg

Sunday, June 15, 2014

பனையூர் நோட்ஸ் 2 2.நெடுநல்வாடை

பனையூர் நோட்ஸ் 2

இன்னம்பூரான்
15 06 2014

2.நெடுநல்வாடை
உலகிலே அதிக மழை பெய்யும் இடம் என்று பாலபாடத்தில் படித்த சிரபுஞ்சிக்கு போனபோது பெரிய குடை எடுத்து சென்றிருந்தோம். மழை என்னவோ பெய்யவில்லை! என்ன தான் மழை பெய்தாலும், அந்த ஊரில் தண்ணி கஷ்டமாம்!  தூறல், நனைவதற்கு இதமாக இருந்தது. எப்படி தெரியுமா? தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள் ‘சிந்தாமணி‘ இலக்கியத்தை அச்சுக்குக் கொடுக்க கிளம்பும் போது, ‘தூறுகிறது போலிருக்கிறதே‘ என்று திரு.கோபாலசாமி முதலியார். தயங்கி தயங்கி சொல்ல. ‘...சிறு தூறல் நல்லது தான். குற்றமில்லை. புறப்படலாம்.‘ என்றாராம், தாத்தா. ‘நாளும் கோளும் என் செய்யும்?’ என்று அப்பர் சுவாமிகளிடம் வினவிய திருஞானசம்பந்தர் 5 ஆவது கோளறு பதிகத்தில், ‘...உருமிடியும் மின்னும் மிகையான பூதமலையும் அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல அடியார்க்கு மிகவே’ [‘...என் உள்ளத்தில் புகுந்து சிவபெருமான் தங்கியுள்ளதால்...முழுங்குகிற இடி,மின்னல்...நல்லதே செய்யும்.] என்று ஆணையிட்டுக்கூறியது தாத்தாவின் நினைவுக்கு வந்திருக்கலாம். அந்த பதிகம் எனக்கு 1960ல் தெரியவந்தது காஞ்சி முனிவரின் அனுக்ரஹ பாஷணையினால். எட்டு கிரஹங்கள் ஒரு நாளில், ஒரே நேர்கோட்டில் அணி வகுத்து நிற்பதால் பெருங்கேடு வரும் என்று ஜோதிட உலகில் பரபரப்பு. எல்லாம் சர்வநாசம் என்று கூவினாலும், அவர்கள் தக்ஷிணை வாங்கிக்கொள்ள மறக்கவில்லை!  நானும், என் குடும்பமும் அன்று ‘வழிப்பறி கொள்ளை புகழ்’ மொகல்சராய் பாஸெஞ்சர் வண்டியில் பயணம், தந்தை சொல் மிக்க மந்திரமான கோளறு பதிக தியானம் செய்து கொண்டு. பிழைத்து மிஹிஜாம் ரயில் நிலையத்தில் இறங்கினோம் என்க.

இடி, மின்னல் மழை என்றவுடன், சின்ன வயதில் அப்பா சொன்ன கதை ஒன்று நினைவிற்கு வந்தது. ‘சோ’ என்று மழை பொழிகிறது. ஆலங்கட்டி மழை. வீதி நெடுக ஆறாய் ஓடியது, சக்கையும், சகதியுமாக. ‘...நள வருஷம் கார்த்திகை மாதம் 8-ம் தேதி (16-11-1916) புதன்கிழமை நல்ல நாளில் பாரதியார்...ஒரு மாடி வீட்டிற்கு குறைந்த வாடகைக்குக் குடியேறினார்...அன்று மாலை சுமார் நாலு மணியிலிருந்தே மேகக்கூட்டங்கள் குவிந்து குவிந்து ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தன. எங்கள் வீடு ...மழைக் காலத்திற்குச் சுகமில்லை...இரண்டு மெத்தைகளுக்கு நடுவிலே இருக்கும் பள்ளமான அறை, வீதிப்புறம் இருக்கும் அறை, தொட்டில் இருக்கும் அறை - இவை மூன்றே நனையாத இடங்கள். மற்ற இடமெல்லாம் தெப்பமாகிவிடும்.’ என்று திருமதி யதுகிரி அம்மாள்
எழுதிய மாதிரியான இக்கட்டான நிலைமை. ஒரு தெப்பமான அறையில் அடைபட்டு கிடந்த இருவரில் ஒருவன், ‘இந்த மழை நிற்காது.’ என்று ஆரூடம் கூறிவிட்டு, மல்லாக்கப்படுத்தானாம். அடுத்தவனோ யதார்த்த வாதி, பிழைக்கிற பிள்ளை. ‘என்று தான் மழை நிற்கவில்லை?’ என்று வினாக்குள் விடையடக்கி சொல்லி விட்டு, தன் அலுவலை கவனிக்கப் போனானாம். அந்த மாதிரி...

பொய்யா மொழி போல, இடை விடாது பொய்க்காமல் பெய்த மழையிலிருந்து ஆவினத்தை காப்பாற்ற  தலை தெறிக்க ஓடினராம், இடைச்சாதி மக்கள்.  அதை எத்தனை தத்ரூபமாக நக்கீரனார் சொல்கிறார் என்பதை பாருங்கள்.

ஆடு மாடு மேய்க்கும் இடைசாதியினர் நீண்டு வளைந்த கோல் ஒன்றை வைத்திருப்பார்கள், மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமியை போல; மக்களை மேய்க்க அவதரித்த ஏசு பிரானை போல. அவர்களுக்கு இந்த மழை, வெள்ளம் எல்லாம் பிடிக்காது. குழப்பம்; பசு மாடுகளின் அவஸ்தை கண்டு விசனம். கால் நடைகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.  அவர்கள் அணிந்திருக்கும் பூமாலைகளிலிருந்து நீர் சொட்டுகிறது. ‘சில்’ லென்ற ஈர காத்து வேறே. குளிரில் கன்னங்கள் உப்ப, கைகள் நடுங்க, கடுங்குளிரில் வாடுகிறார்கள். எப்படியோ கனல் மூட்டி குளிர் காய்கிறார்கள்.

இடையர் நிலை
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பிப்
புலம் பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்
நீடு இதழ்க் கண்ணி நீர்அலைக் கலாவ
மெய்க்கொள் பெரும் பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க  (3 – 8)
ஆர்கலி – வெள்ளம், சமுத்திரம் / முனைஇய –வெறுக்கும் / கொடுங்கோல் கோவலர் –வளைந்த கோல் பிடிக்கும் இடைச்சாதியினர் / ஏறுடை – கால் நடை / இன நிரை – மந்தை /  புலம் பெயர் – இருக்கும் இடத்தை விட்டு விலகி / வேறு புலம் பரப்பி / புலன் பெயர்ந்து /  புலம்பொடு – புலம்பலோடு / கலங்கி –, குழம்பி, விசனத்துடன் / நீரலைக் கலாவ - சொட்ட சொட்ட நீர் வழியும் /  நீடு இதழ் கோடல் கண்ணி– நீண்ட இதழ்கள் கொண்ட கோடற்பூமாலைகள் /   மெய்க்கொள் / அவர்களது உடலில் / நீரலைக் கலாவ - சொட்ட சொட்ட நீர் வழிய  /  பலருடன் -பலருடன் / பெரும் பனி நலிய – குளிரினால் வருந்தி / கவுள் புடையூஉ நடுங்க – உப்பிய கன்னங்களுடன்/ கைக்கொள் கொள்ளியர் –கைகளை தணலுக்கு மேலாக வைத்து குளிர் காய்கிறார்கள்.
இந்த எட்டுவரி யாப்பை ஒரு உருவகமாக கற்பனை செய்தால்:
ஆழ்கடலும், சினையுற்ற மேகங்களும், மழையும் ஒரு ‘மறுபடியும் கருவடையும்’ காலச்சக்கரமே. அதில் உழலும் உயிரினங்கள் தான் கால்நடை மந்தை. பாலையும் கறந்து, தோலையும் பதனிட்டு ஆதாயம் தேடுபவர்கள் தான் குளிர்காயும் மானிட ஜன்மங்கள். இது ஒரு உருவகம். மழை ஒரு இயற்கை வளம். அதிலிருந்து மந்தையை மீட்டு, குளிர் காய்ந்து தன்னையும் மீட்டு விமோசனம் காண்பவன் தான் ‘எங்கிருந்தோ வந்து இடைச்சாதி நான் என்ற’  குடை பிடித்த மஹானுபாவன்.  இது மற்றொரு உருவகம். அது பற்றி அடுத்த இழையில் பார்ப்போமா?
குறிப்பு: முனைவர் வைதேகியின் ஆங்கில மொழியாக்கம் படிக்கக்கிடைத்தது. நன்றி.