Friday, June 27, 2014

சொட்டு மருந்து! [1]

சொட்டு மருந்து!

இன்னம்பூரான்.
பிரசுரம்: http://www.vallamai.com/?p=47260
Evening-Tamil-News-Paper_96997797490
சிறு துளி பெருவெள்ளம். இதுவும் அதுவுமாக சட்டம், தணிக்கை, விழுப்புணர்ச்சி, ஆலோசனை நேரம் போன்ற தகவல்களை தொகுத்தும், அவிழ்த்தும், சங்கிலித்தொடராகவும், தனிமொழியாகவும், அவ்வப்பொழுது சிறு துளிகள், உஜாலா சொட்டு நீலம் போல் இங்கே காட்சி தருகின்றன. அவற்றால் ஏற்படும் பிரகாசமோ, பெருவெள்ளமோ, உமது பாடு.
உலகமெங்கும் வினாடி தோறும் பற்பல நிகழ்வுகள்.
சில வியக்க வைக்கின்றன; மீனா ஐஏஎஸ் பாஸ் செய்து விட்டார். இத்தனைக்கும் அவர் தன் கையால் பரிக்ஷை எழுதவில்லை. ஆள் வைத்து எழுதினார். படித்தது மற்றவர்கள். அதை உள்வாங்கியது, அவர். செவிவாய் செய்திகளை அவர் ஜீரணம் செய்த விந்தை சாகசம் பற்றி கேட்கும்போது, நமது மனம் பாகாய் உருகி விடுகிறது. சர்வ வல்லமை புகழ் ஆண்டவனே! உனக்கு கண் இல்லையா? உங்களுக்கு ஹெலென் கெல்லரை பற்றியும், வேத் மேஹ்த்தா பற்றியும் தெரியுமோ?  ஆம். மீனாவும், அந்த சாதனையாளர்களைப்போல, கண்பார்வை இழந்தவர். நேர் காணலில் அவரளித்த பதில்கள் பொன் வாக்கு.  வாருங்கள். அவரை வாழ்த்துவோம்.
“பெண்புத்தி பின்புத்தி”,”ஏழை சொல் அம்பலம் ஏறாது.” “இஸ்லாமில் பெண்களுக்கு மதிப்பில்லை.” இது போன்ற குப்பைகளை அகற்றுங்கள் என்கிறார், சுல்தானா பேகம். ஷிமோகா-வாழ் பெண்ணரசியான இவர், சிசேரியன் அறுவை சிகிச்சையில் திருமகனை பெற்றவர். மயக்கம் தெளிந்தவுடனேயே, ஆசிரியர் தகுதி தேர்வு எழுத போய்விட்டார். இடது கையில் ஐ வி.திரவம், ஊசி மூலம். வலது கை பிடித்தது, பேனாவை. உறுதுணை: வாடகை வண்டி ஓட்டுனராகிய கணவர், அஹ்மத். மகவை பார்த்துக்கொண்டது அம்மாவும், மாமியாரும். வசதி செய்து கொடுத்தவர்கள், தேர்வு மைய அதிகாரிகள். என் மகன் கூட ஆஸ்பத்திரியிலிருந்து போய் தான், முதல் வருட டாக்டர் பரிக்ஷை எழுதினான். மூன்றாவது மாடியில் பரிக்ஷை. இவனுக்கு தனி அறை, கீழே. எழுதும் விரல் ஒரு விபத்தில் நசுங்கியும் ஐ.ஏ.எஸ். எழுதிய எனக்கு ஒரு உதவியும் கிட்டவில்லை. எழுத்து கோணா மாணா என்று மார்க் குறைத்திருப்பார்கள்!அது அந்த காலம்.
ஒரு மடலாடலில் படைப்பாற்றல் பேசப்பட்டது. ஒரு எட்டு வயது சிறுவனின் அபாரமான படைப்பு. ஆம். சிந்தனை ஒரு கொடுப்பினை. அதை விட பெரியது கற்பனை. கற்பனை இல்லையேல், இலக்கியம், கலை, அழகு, சுவை, மொழி எல்லாமே சூன்யம். முருகன் என்ற பெரிய கயிறை பற்றியும், வள்ளி என்ற சிறிய கயிறை பற்றியும் எழுதிய மகா கவி பாரதியார், வாயு தேவனையும், தன்னையும் முன்னிறுத்தி, ஒரு காதல் அமர காவியம் படைத்து விட்டார். கற்பனை வளத்தைப் பேணாத கல்வி, ஏட்டுச்சுரைக்காய்.
ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயிலாண்டி. நுகர்வோர்கள் அந்த ரகம். அவர்களை துரும்பாக மதிப்பவர்கள் பெரிய மைனரும், சின்ன மைனரும். ஆனால், இந்த நுகர்வோர் நீதி மன்றங்கள் மடியில் கை வைத்து நாடி பார்க்கிறார்கள்; நாட் அல்வேஸ் என்றாலும். ‘force majeure’ என்ற லத்தீன் சொல்லுக்கு பொருள்: கடவுள் துணை? இல்லை. கடவுள் துணை இல்லை. கடவுள் செய்த தீவினை -உதாரணம்: சுனாமி.
வேளாண்மை செய்ய சென்ற ‘ரூம் பாட்ச்சா’ அறுந்து கிடந்த மின்கயிறு தாக்கி மரணம்: செப்டம்பர் 4 , 2009. அவரது மனைவியும், மகன்களும், விபத்தின் காரணம் மின்வாரியத்தின் பரிமாரிப்பு கடமை தவறுதல் என்று குற்றம் சாட்டி, ரூ.6 லக்ஷம் நஷ்டஈடு கேட்டார்கள். ‘சே! சே! அதெல்லாம் ஆண்டவன் தீவினை என்று சொல்லி, ‘போடா பொக்கை’ என்று உதறி விட்டனர், மின் வாரியம். ‘டெக்னிகல்’ என்று சொல்லப்பட்ட மண்ணாங்கட்டி வாதங்களை தீர விசாரணைக்குப் பின் நிராகரித்த சென்னை உச்ச நீதி மன்றம் சொன்னது:
‘அறுந்த மின்கயிறு அடித்த ஷாக் என்பதை மின் வாரியம் ஒத்துக்கொண்டதும், பின்னர் செய்த சீரமைப்பும் ஆவணங்களில் உள்ளன. ஒம்மாச்சியை குற்றம் சொல்லாதே. ரூ 5 லக்ஷம் நஷ்ட ஈடு.’
தர்மமிகு சென்னையில் நூற்றுக்கணக்கான இடங்களில் மின்கயிறுகள் தாறுமாறாக  தொங்கலாட்டம் போடுகின்றன. மாநிலம்/ தேசம் முச்சூடும் அதே. யாராவது சாகுவதற்கு முன், விழிப்புணர்ச்சி இயக்கம் நடத்துங்கள்.
மற்றொரு இளிச்சவாயன். திரு. எஸ். நாகராஜன்,”மேக் மை ட்ரிப்” என்ற சுற்றுலா கம்பெனியிடம் ரூ.90.000/- கட்டி, குடும்ப சுற்றுலாவுக்கு பதிவு செய்தார். சிலருக்கு வீஸா கிடைக்காததால், ரத்து செய்ய கோரினார். ஒரு மாதமே இருக்கும் காலகட்டத்தில் ரத்து செய்தால், ஒரு காசு கூடக்கிடைக்காது என்று போட்ட கண்டிஷனை காட்டி, ‘போடா பொக்கை’ என்று விட்டார்கள். அந்த கண்டிஷனே தப்பு என்று அந்த தன்னிச்சை கண்டிஷனையே நிராகரித்து, ரூ. 90,000/- + நஷ்ட ஈடு ரூ.7,000/- திரு.நாகராஜனிடம் கொடுக்கும்படி ஆணையிட்டது. You must always read the fine print.
வீராதி வீரன்! சூராதி சூரன்! யாரு? ஆர்.கே.சத்பதி, ராணுவ மைய விஞ்ஞானி (DRDO). அய்யா ஹைதராபாத் போன இடத்திலெ, ஒரு கலாட்டா.  போறாத காலம். போறப்போக்கில், ஓடிப்போன இளைஞன், இவரை கத்தியால் குத்தி விட்டான்.  ரத்த மயம். வலி பொறுக்காவிடினும், மனம் தளராமல், தானே நடந்து சென்று போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளித்தார். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்னால், ‘மஞ்சள் பத்திரிகை’ புகழ் லக்ஷ்மீகாந்தன் மாம்பலம் சாரங்கபாணி தெருவில் ரிக்க்ஷாவில் வரும் போது, ஒருவன் வயிற்றில் குத்த, ஒரு கையால் குடலை அமுக்கிக்கொண்டு, ஒரு கையால் குத்தியவனை பிடித்துக்கொண்டு, போலீஸிடம் போனதாக, படித்த ஞாபகம். பாடபேதம் இருக்கலாம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:http://www.tamilmurasu.co.in/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_96997797490.jpg

Wednesday, June 25, 2014

பனையூர் நோட்ஸ் 5:நெடுநல்வாடை 5

பனையூர் நோட்ஸ் 5


இன்னம்பூரான்
25 06 2013

நெடுநல்வாடை  5
ஐயகோ! என்ன குளிரடா! மலையை உறைய வைக்கும் போல் இருக்கிறதே...
(தொடருகிறது)
மழையும், மலையும், குளிரும் ஐம்பூதங்களை நமக்கு நினவு படுத்தின. அவையாவன: விண்வெளி, காற்று, தீ, நீர், மண். விண்வெளி என்ற ஆகாசகோட்டை நம் கற்பனைக்கெட்டாத அளவு பெரியது. 
விண்டுரைக்க, அறிய, அரியதாய் 
     விரிந்த வான வெளியென நின்றனை. 
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை 
     அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை
மண்டலத்தை அணுவணு வாக்கினால் 
     வருவ தெத்தனை அத்தனை யோசனை, 
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை

(மகாசக்தி வாழ்த்து - 1: மஹாகவி பாரதியார்)
நாம் வாழும் பூமண்டலம் தான் விண்வெளியில் உயர்ந்தது என்ற பத்தாம்பசலி தற்பெருமை சுக்குநூறாக உடைந்து விட்டது. அது பிரபஞ்சத்தின் ஒரு சிறுதுளியே என்று மேற்கத்திய விஞ்ஞானம் அறிந்து கொள்வதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆரியபட்டர், வராஹமிஹிரர், பாஸ்கராச்சாரியார் போன்ற இந்திய விஞ்ஞானிகள் எல்லாவற்றையும் துல்லியமாக கணித்து வைத்துள்ளனர். தற்காலம்  விண்வெளிப்பயணம், ஏவுகணை உந்துகை, ஏன் விண்வெளிக் குடியேற்றம் வரை, ஏதோ பக்கத்துப் பேட்டை போக்குவரத்தைப்போல பேசப்படுகிறது. க்யூராசிடி என்ற நவீன விண்கோள் கிரகத்தில் இறங்கி இரண்டு வருஷக்குடித்தனம் செய்யப்போகிறது. இதெல்லாம் எங்கே கொண்டு போய் விடுமோ!
வாயு தேவன் தென்றலாகவும் வருவான்; அனுமனையும், பீமனையும் பெற்ற அந்த பலசாலி தந்தை புயலாகவும் வீசுவான்;தென்றலாகவும் வந்து மகிழ்வூட்டுவான்; ஆடை கலைப்பான். முகத்திலே மிருதுவாக மேய்ந்து புன்னகை தருவிப்பான்; பாவையின் தோகையை ஊடுருவி கூந்தலை அலக்கழித்து ராஸலீலை செய்திடுவான்.  மேகத்தை விரட்டுவான். பாவேந்தர் பாரதி தாசன் ‘தென்றல்’ என்ற கவிதையில் சொல்வதைப்போல:


மென்காற்றும் வன்காற்றும்
அண்டங்கள் கோடி கோடி அனைத்தையும் தன்ன கத்தே
கொண்ட ஓர் பெரும் புறத்தில் கூத்திடு கின்ற காற்றே!
திண்குன்றைத் தூள் தூளாகச் செய்யினும் செய்வாய் நீஓர்
துண்துளி அனிச்சம் பூவும் நோகாது நுழைந்தும் செல்வாய்! 14
.......
உன்அரும் உருவம் காணேன் ஆயினும் உன்றன் ஒவ்வோர்
சின்னநல் அசைவும் என்னைச் சிலிர்த்திடச் செய்யும்!
பெற்ற
அன்னையைக் கண்டோ ர், அன்னை அன்பினைக் கண்ணிற் காணார்,
என்னினும் உயிர்க் கூட்டத்தை இணைத்திடல் அன்பே அன்றோ? 17

தென்றலின் குறும்பு
உலைத்தீயை ஊது கின்றாய்; உலைத்தீயில் உருகும் கொல்லன்
மலைத்தோளில் உனது தோளும், மார்பினில் உன்பூ மார்பும்
சலிக்காது தழுவத் தந்து குளிர்ச்சியைத் தருவாய்! பெண்கள்
விலக்காத உடையை நீ போய் விலக்கினும், விலக்கார் உன்னை! 18
****
அக்னி தேவன் என்று பூஜிக்கப்படும் ‘தீ’ யை பற்றி மூன்று வருடங்களுக்கு முன் நான் எழுதியதை மீள்பதிவு செய்கிறேன்.
தேவன் வந்தான்!
अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
ஒலி!
எங்கிருந்தோ ஒலிக்கிறது! 
எதிரொலியும் மென்மையாக!
வேதம். ரிக்வேதம். 
ப்ரபஞ்சம் ஜனித்தது. 
வேத அத்யனனம் தொடர்கிறது. 
ஒளி!
என்னே பிரகாசம்! சூர்யனின் தகிக்கும் சூடு! சந்திரனின் குளிர்ந்த நிலவு!
அக்னிதேவனே! சுஸ்வாகதம்! நல்வரவு! வா! சடுதியில் வா!
சாமகிரியைகள் எல்லாம் புதியவை. மங்கலமானவை. சாஸ்த்ரோக்தம்.
எடுத்து வைத்து விட்டேன், குருநாதா!
யாகசாலைக்குக் கோலம் போட்டுவிட்டேன். 
செம்மண் கரையோரங்கள். வெள்ளைக்கோலங்கள், பிராணநாதா!
புஷ்பமாலைகள் வகைக்கு ஒன்று, தொடுத்துக் கோர்த்து அடுக்கியிருக்கிறேன், அப்பா!
முக்கனிகளும் கொணர்ந்தேன், தந்தையே! கூடை கூடையாக.
ஸ்வாமி! நாங்கள் தான் அண்டை, அயல். அணிகள் பல கொணர்ந்தோம்; ஆபரணக்குவியல் பார்த்தீரோ! நவரத்னங்கள் கொட்டிக்கிடப்பதைக் கண்டீரோ! எல்லாம் சமர்ப்பணம்.
சிஷ்யா! அக்னிதேவன் வந்தாரே. முகமன் கூறினாயோ?
ஸ்வாமி! கடைந்துகொண்டு இருக்கிறோம். 
अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
எழுந்தருளவேண்டும், ஐயனே! 
நன்நிமித்தத்தீயே வருக. 
தெய்வத்திருமகனே வருக.
அன்னை ‘ஸ்வாஹா’ வந்திருக்கிறாளோ!
இருவரும் ஆசனத்தில் அமருக. 
அலங்காரங்கள், ஜோடனை, ஷோடசோபசாரங்கள், முகஸ்துதி, சாஷ்டாங்க நமஸ்காரம்.
அக்னிதேவனுக்கு அதீதப் ப்ரீதீ! சிஷ்யா! மறுபடியும் எல்லாரும் தண்டனிடுவோம்.
अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
ஒரு பொறி பிறந்தது. 
பிறகு பறந்தது. 
தீ மூண்டது.
अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
கொழுந்து விட்டு எரிந்தது.
ஸ்வாஹா: ஸ்வாஹா: ஸ்வாஹா: ஆஹூதி! பூர்ணாஹூதி! 
அக்னிதேவன் ஸ்வீகரித்துக்கொண்டார். 
அக்னி தழுவ, தழுவ, முனகும் சப்தங்கள். 
மற்றபடி நிசப்தம்.
எனக்கு பசிக்கிறது.
அம்மா! அப்பாவுக்கு பசிக்கிறதாம்.
அக்னிதேவனே! சுஸ்வாகதம்! நல்வரவு! வா! சடுதியில் வா!
அடுப்பில் உனக்கு வாசம். வா! சடுதியில் வா! அவருக்கு பசி தாங்காது.
போஜனம்! தாம்பூலம்! அடுப்பில் பூனை! கணகணப்பும் உன் நல்வரவே!
என்ன அங்கே ஹீனக்குரல்! 
அக்னி தேவன் யாத்திரைக்கு புறப்பட்டு விட்டார், தந்தையே!
अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
ஸ்வாமி! ரக்ஷிக்கணும். 
அப்படியெல்லாம் பேசக்கூடாது. யான் சாமான்யன்.
ஸ்வாமி! அடியேன் உங்கள் அகத்துக்கு எதிர்த்த வாடை. 
எஜமானன் வந்தார். என் அன்னை...
தெரியுமே! அதனால் தான் அக்னி தேவன் யாத்திரைக்கு புறப்பட்டு விட்டார் போலும்!
ஈஷ்வரோ ரக்ஷது!
சாயுங்காலம்! 
சூர்யன் முழுதும் அஸ்தமிக்கவில்லை.
சந்திரோதய வேளை.
இருட்டவில்லை. மங்கிவிட்டது.
ஸ்வாமி! அடியேன் உங்கள் அகத்துக்கு எதிர்த்த வாடை.
சாகரம் சென்று வருகிறீர்களா?
ஆம் ஸ்வாமி! அக்னிதேவன் வந்தார்.
ஆற, அமர தழுவினார், என் அன்னையை.
உன் அன்னை அங்கு செல்லவே இல்லை, அப்பனே!
ஆம்! ஸ்வாமி! இல்லை, ஸ்வாமி!
அக்னி! பிறகு ஜலம்! இனி நான் என் அம்மாவை காண முடியாது. 
அவள் உன்னுள் என்றும் வாழ்வாள். உனக்கும் நித்யவாஸ ப்ராப்தம்.
अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
ஒலி!
எங்கிருந்தோ ஒலிக்கிறது! 
எதிரொலியும் மென்மையாக!
வேதம். ரிக்வேதம். 
ப்ரபஞ்சம் ஜனித்தது. 
வேத அத்யனனம் தொடர்கிறது. 
ஒளி!
என்னே பிரகாசம்! சூர்யனின் தகிக்கும் சூடு! சந்திரனின் குளிர்ந்த நிலவு!
அக்னிதேவனே! சுஸ்வாகதம்! நல்வரவு! வா! சடுதியில் வா!

(இன்னம்பூரான்
 02 07 2011)
நீரின் இன்றியமையாதை அது ‘அமிழ்தம்’ என்று சுருங்கச்சொல்லி தெளிவாக விளங்க வைத்து விட்டார், திருவள்ளுவர். 

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று...நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.’ [குறள் 11 & 20]

தாய்மண்ணை தொட்டு வணங்குவது உலக மரபு. இன்னம்பூரில் நானும் செய்கிறேன். பிரதமர் மோடியும் செய்தார். போப்பாண்டவரும் செய்தார். 

‘நீர் எனும் பூதத்திலிருந்து தோண்றிய பூமி எனும் சட பூதத்தில், தன் சுய தன்மையான மணமும், நீரின் சுவையும், நெருப்பின் வடிவத்தையும், காற்றின் தொடு உணர்வு (ஸ்பர்சம்), ஆகாயத்தின் ஒலி ஆகிய ஐந்து தன்மைகளை கொண்டுள்ளது.னே முதன்மை.’ என்று பஞ்சஈகரணத்தில் விளைவுகளை ஆராய்ந்து எழுதிய ஶ்ரீ ராமகிருஷ்ண மடத்துத் துறவி சுவாமி சதானந்தர் கூறுகிறார்.

மழை பெய்தால் உயிர் துளிர்க்கும்; மலரும்; காய்க்கும்; கனி தரும்; தேனீ மொய்க்கும்; மகரந்தம் பரவும்; விதை ஊன்றும்; மறுபடியும் உயிர் துளிர்க்கும்; மலரும்; காய்க்கும்; கனி தரும்; தேனீ மொய்க்கும்; மகரந்தம் பரவும்; விதை ஊன்றும். இறைவா! என்னே உன் கருணை ! 

சுற்றி வளைத்து நெடுநல்வாடைக்கு வருகிறோம். உரை நச்சினார்க்கினியார்; சுவடிகளை பரிசோதித்துப் பதிவு செய்தது, தமிழ் தாத்தா உ வே சா.

மழைக்காலச் செழிப்பு
புன் கொடி முசுண்டைப் பொதிப்புற வான்பூப்
பொன் போல் பீரமொடு புதல் புதல் மலரப்
பைங்கால் கொக்கின் மென் பறைத் தொழுதி
இருங்களி பரந்த ஈர வெண் மணல்
செவ்வரி நாரையொடு எவ்வாயும் கவரக்
கயல் அறல் எதிரக் கடும் புனல் சாஅய்ப்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப
அங்கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க
முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை
நுண் நீர் தெவிள வீங்கிப் புடை திரண்டு
தெண் நீர் பசுங்காய் சேறு கொள முற்ற
நளி கொள் சிமைய விரவு மலர் வியன் காக்
குளிர் கொள் சினைய குரூஉத் துளி தூங்க  (13 – 28)

பாடலுக்கு
சொற்பொருள் விளக்கம்
                புன்கொடி முசுண்டை - மென்மையான முசுண்டைக்கொடி, பொதிப்புற வான்பூ - பருத்த வெண்ணிறப் பூ, பொன்போல் பீரமொடு - பொன் போன்ற பீர்க்கம் பூக்களோடு, புதல் புதல் - புதர்கள் தொறும், மலர - மலர்ந்திருக்க, பைங்காற் கொக்கின் - பசுங்காலையுடைய கொக்கின், மென்பறை - மென்மையான சிறகு, தொழுதி - கூட்டம், இருங்களி பரந்த - கரிய வண்டல் மணலில் பரந்து, ஈர வெண்மனல் - ஈரமான வெண்மணலில், செவ்வரி நாரையொடு - சிவந்த வரிகளையுடைய நாரைகளோடு, எவ்வாயும் கவர - எந்தெந்த இடங்களில் மீன்கள் கிடைக்கின்றதோ  அங்கு நின்று மீன்களைக் கரவ, கயல் அறல் எதிர - மீன்கள் நீரினை எதிர்த்து வர, கடும்புனல் - வேகமாக வந்த நீரின் ஓட்டம், சாஅய் - தளர்ந்து, பெயல் - மழை, உலந்து - நீங்கிய, எழுந்த - எழுந்த, பொங்கல் வெண்மழை - மிகுதியான வேண்மேகம், அகல் இரு விசும்புன் - அகன்ற பெரிய வானத்தில், துவலை கற்ப - மழைத்துளிகளை மேலும் தூவுவதற்குக் கற்கும் விதமாக (தூவிக்கொண்டிருந்தன).
                அங்கண் - அவ்விடத்தில், அகல் வயல் - அகன்ற வயல்களில், ஆர் பெயல் - நிறைவாக மழை, கலித்து - செழித்து; வளர்ந்த, வண் தோட்டு - வளப்பமான கதிர்த் தாளினை உடைய, நெல்லின் - நெல்லின், வருகதிர் வணங்க - விளைந்த கதிர் வணங்கி நிற்க, முழுமுதற் கமுகின் - நன்கு செழித்து வளர்ந்த பாக்கு மரத்தின், மணி உறழ் - நீல மணி போன்ற, எருத்தின் - கழுத்துப் பகுதியில், கொழு மடல் - செழித்து வளர்ந்துள்ள மடல்களில், அவிழ்ந்த - காய்த்துள்ள, குழுஉக்கொள் பெருங்குலை - கூட்டமாக இருக்கும் பெரிய பாக்குக் குலைகள், நுண்நீர் - உள்ளிருக்கும் நீர் வற்றி, தெவிள வீங்கி - திரண்டு புடைத்து, புடை திரண்டு - பக்கங்களில் பருத்து, தெண்நீர் - தெளிந்த நீரினையுடைய, பசுங்காய் - பசுமையான காய், சேறு கொள முற்ற - இனிமையான காய்களாக முற்ற, நளிகொள் - செறிந்து விளங்கும், சிமைய - மலையுச்சியில், விரவுமலர் - பல்வேறு மலர்கள் கலந்து பூத்திருக்கம், வியன்கா - அகன்ற சோலையில், குளிர்கொள் சினைய - குளிர்ச்சியான மரக்கிளைகளில், குருஉத் துளி - குருத்துக்களில் மழைத்துளி, தூங்க - இடையறாது விழுந்து கொண்டிருக்க,
கருத்துரை
மென்மையான முசுண்டைக் கொடியின் பருத்த வெண்ணிறப் பூக்கள், பொன் போன்ற பீர்க்கம் பூக்களோடு புதர்கள் தோறும் மலர்ந்திருந்தன.  பசுங்கால்களையும் மென்மையான சிறகினையும் கொண்ட கொக்கின் கூட்டங்கள், கருநிற வண்டல் மணல் பரவிக் கிடக்கும் ஈரமான வெண்மணலில் செவ்வரி படர்ந்த நாரைகளோடு நின்று கொண்டிருந்தன.  அவை மழைநீரின் பெருக்குத் தளர்ந்தவுடன் அந்நீரில் எதிர்த்து வரும் மீன்களை எந்தெந்த இடங்களிலிருந்து கவர முடியுமோ அங்கே நின்று கொண்டு கவர்ந்தன.  மழை நீங்கிய அகன்ற வானத்தில் எழுந்த வெண்மேகம் மழைத்துளிகளை மேலும் தூவுவதற்குக் கற்கும் விதமாகத் தூவிக் கொண்டேயிருந்தன.
                அகன்ற வயல்களில் நிறைவாக மழை பெய்ததினால், செழித்து வளர்ந்த வளப்பமான தாளினையுடைய நெற்கதிர்கள் முற்றி வணங்கி நின்றன.  நன்கு செழித்து வளர்ந்த பருத்த பாக்கு மரத்தின் நீலமணி போன்ற கழுத்துப் பகுதியிலுள்ள மடல்களில் காய்ந்திருக்கும் பாக்குக் குலைகளின் உள்ளிருக்கும் நீர் வற்றி பருத்தும், பசுமையான காய் இனிமையான காய்களாக முற்றின. மலை உச்சியில் பல்வேறு மலர்கள் கலந்து பூத்திருக்கும் அகன்ற சோலையில், குளிர்ச்சியான குருந்த மரக்கிளைகளின் குருத்துகளில் இருந்து மழைத்துளிகள் இடையறாது விழுந்து கொண்டேயிருந்தன.
=#-
சித்திரத்துக்கு நன்றி:  http://hdfons.com/wp-content/uploads/2013/01/Rain-Drops-Wallpaper-1.jpg