Wednesday, November 1, 2017

ஞானச் சுடர் [3]




ஞானச் சுடர் [3]

இன்னம்பூரான் 
நவம்பர் 01, 2017

பிரசுரம்: http://www.vallamai.com/?p=80975

அரசல் புரசலாகக் குழப்பம் அதிகரித்து தலைநகர் முழுதும், பின்னர் சிக்கலாகிவிட்ட மகளிர் கூந்தல்போல் மற்ற பிராந்தியங்களிலும் பரவியது; ‘கந்தரகூளம் போல’ என்று ஒரு பிள்ளையார் கோயிலாண்டி அதை வருணித்தார். இது இப்படியிருக்கும்போது, கணீரென்று நாற்கால் மண்டபத்தின் ஆராய்ச்சி மணி ஒலித்தது; ஜயபேரிகை முழங்கியது; ஆங்காங்கே தண்டோரா சத்தம் காதைப் பிளந்தது. இவையெல்லாம் அவைக்கு அரசர் வருகிறார் என்பதற்கு சமிக்ஞைகள். விழுந்தடித்துக்கொண்டு அதிகாரவர்க்கம், தத்தம் சீருடைகள், மெடல்கள், தலைப்பாகைகள் அணிந்து கொண்டு தர்பார் மண்டபத்துக்கு விரைந்தனர். ரதகஜதுரகபதாதிகளின் படை புடை சூழ, டவாலிகள் ‘பராக்’! பராக்’! ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட வீராதி வீர சூராதி சூர மன்னர்பிரான் வருகிறார் என்று கட்டியம் கூற, அவரும் அலங்கார பூஷிதனாக, ஆனால் சிந்தனையில் ஆழ்ந்த முகத்துடன் அரியணையின் படிகளின் பக்கவாட்டுப் பதுமைகளை பார்த்துக்கொண்டே ஏறியமர்ந்தார்.
சங்கொலியும், யாழிசையும், பாணர்களின் புகுழ்மாலைகளும் அவருக்கு உற்சாகம் அளிக்க முயன்று தோல்வி அடைந்தன. இது எல்லாம் எல்லா ராஜாங்கங்களிலும் நடப்பவைதான். இங்கு ஒரு வித்தியாசம் யாதெனில் அரசர் ஏதோ ஒரு தெளிவு பெற்று விட்டார் என்று அரண்மனை சோதிடர் காதோடு காதாக திவானிடம் ரகஸ்யம் கூறினார். அது என்ன?
[தொடரும்]
*****
சித்திரத்துக்கு நன்றி:


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment