Sunday, January 29, 2017

பாபநாசம் சிவன் (செப்டம்பர் 26, 1890 - அக்டோபர் 1, 1973)

நண்பர் கணேசனுக்கு என் வாழ்த்துக்கள். பூமியின் ஒரு கோடியில் நீங்கள்; மற்றொரு கோடியில் நான்.
இருவருக்கும் ஒரே வினாடியில் பாபநாசம் சிவன் அவர்களின் கடாக்ஷத்தை பெறுகிறோம். அதிகாலை பஜனைகளில், நானும் அவர்களுடன்,சில நாட்களில்,பஜனைகளில் கலந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிட்டியிருந்தது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு, 'அன்றொரு நாள்' தொடரில் அவரை பற்றி நான் எழுதிய கட்டுரையை, இங்கு பதிவு செய்கிறேன்.
அன்புடன்,
இன்னம்பூரான் 
ஜனவரி 29, 2017
********************
அன்றொரு நாள்: அக்டோபர் 10,
பாபநாசம் சிவன் (செப்டம்பர் 26, 1890 - அக்டோபர் 1, 1973)

கையேந்தி பவன்களில் உணவருந்தி, மச்சு, குச்சுக்களில் குடக்கூலி இருந்து, காலேஜில் படியாமல் இருந்து வந்த காலகட்டத்தில், கபாலி கோயில் சுத்து வட்டாரத்தில் அஞ்ஞாத வாசம் செய்ததுண்டு. மார்கழி மாதம் அதிகாலையில் குளத்தாண்டே ஜிலு ஜிலு மாருதம் வீச,படா படா பெட்டி ஆர்மோனியம் ஒலிக்க பஜனை இசைத்து வரும் பாபநாசம் சிவன் அவர்களுக்கு, ஜால்ரா போட்டதுண்டு. அது அந்தக்காலம். திரு. கிருஷ்ணன் வெங்கடாசலம் பெரியவரை பற்றி நேர்த்தியாக எழுதியிருக்கிறார். அவற்றிலிருந்து சில துளிகள். முழுதையும் படிக்க உதவியாக, உசாத்துணை.

“...பாபநாசம் சிவன்: அவரைத் தமிழ்த் தியாகய்யர் எனக் கூறுவார்கள். சினிமாவுக்காக அல்லாமல் ஏராளமான தமிழ்ப்பாடல்களை எழுதி, அவைகள் சினிமாவில் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன... தெலுங்கில் எழுதிய தியாகய்யர் போல் தமிழில் ஏராளமான பக்திப்பாடல்களை இயற்றி இன்றளவும் அவைகள் கச்சேரி மேடைகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.பாடல்களை எழுதும்போதே அவற்றிற்கான மெட்டுக்களையும் அமைத்துவிடும் திறன் இவருக்கு உண்டு. அவைகள் யாவும் கர்நாடக சங்கீத மெட்டில் அமைந்திருந்ததால் சினிமா இசையமைப்பாளர்களுக்கு எவ்வித சிரமமும் இருந்ததில்லை...தஞ்சை மாவட்டம் போலகம் எனும் ஊரில் 1890-ல் பிறந்த இவரது இயற்பெயர் ராமய்யா. சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். இவரது இளமைக் காலம் திருவனந்தபுரத்தில் கழிந்திருக்கிறது...் ஏழை பிராமணர்கள் இலவசமாகச் சாப்பிட முடியும். அப்படி அன்னதானம் அளிக்கப்படும் இடங்களுக்கு ஊட்டுப்புரை என்கிற பெயர் உண்டு. இங்கு தான் ராமய்யாவுக்கு சாப்பாடு... பாலக்காடு அருகே நூருணி என்கிற ஒரு ஊர். இந்த ஊரைச் சேர்ந்த பாகவதர் ஒருவரின் நட்பு இங்கே கிடைத்தது. அது இவரது இசை ஞானத்தை வளர்க்க உதவியாக இருந்தது...1939 ஆம் ஆண்டு சென்னையில் குடியேறினார். வீணை எஸ் பாலச்சந்தரின் தகப்பனார் சுந்தரம் அய்யரின் நட்பு கிடைத்தது. சுந்தரம் அய்யரின் மூத்தமகன் எஸ் ராஜம் (ஓவியர்) எஸ் பாலச்சந்தர், மகள் எஸ் ஜெயலட்சுமி மற்றும் சுந்தரம் அய்யர் ஆகியோர் நடித்த 'சீதா கல்யாணம்' என்கிற திரைப்படத்திற்கு தன் முதல் பாடல் இயற்றினார் பாபநாசம் சிவன். மைலாப்பூரில் வாசம். ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் நடைபெறும் பஜனை கோஷ்டியில் பிரதான பாடகர். மாட வீதியைச் சுற்றி வரும் இந்த பஜனை கோஷ்டி, கற்பகாம்பாள் பேரில் பல பாடல்களை இயற்றிப் பாடியிருக்கிறார்...பாபநாசம் சிவன் தனது குருவாக பிரபல சங்கீத வித்வான் கோனேரிராஜபுரம் வைத்யநாதய்யரையே கருதி வந்திருப்பதாக ஒரு பேட்டியில் அவரது மகள் திருமதி ருக்மணி ரமணி அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். சிவனின் சகோதரன் ராஜகோபாலய்யரின் புதல்வி மறைந்த எம்ஜியாரின் துணைவியார் வி.என். ஜானகி என்கிற பதிவுகள் உள்ளன. ..இவரது கீர்த்தனைகள் பலவும் புத்தக உருவில் வெளிவந்திருக்கிறது. சிந்து பைரவி ராகத்தில் இவர் இயற்றி, ஆலத்தூர் சகோதர்களால் பாடப்பட்டு, இசைத்தட்டாக வெளிவந்த பாடப் 'சந்திரசேகரா ஈசா', இப்பாடல் இன்றும் கூட பல மேடைகளில் கர்நாடக இசை வித்வான்களால் பாடப்படுகிறது. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் கண்களிலிருந்து கண்ணீர் பெருகுவதைத் தவிர்க்கவே முடிவதில்லை...இவைகள் தவிர தமிழின் முக்கியமான சில படங்களில் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. 1939ல் சேவாசதனம். 1943ல் குபேரகுசேலா. இதில் குசேலராக மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். காலத்தால் அழிக்க முடியாத திரைக்காவியம் 'தியாகபூமி'. இப்படத்தில் நடித்த பாபநாசம் சிவன் அவர்களைத் திரையுலகம் மறக்க இயலாது...1961 ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது அளித்து கௌரவித்தது. காமகோடி பீடம் இவருக்கு 'சிவபுண்ணியகானமணி' என்கிற பட்டத்தை வழங்கியது. தமிழ் சினிமா உள்ள காலம் முழுவதம் பாபநாசம் சிவனின் பெருமை திரையுலகில் நிரந்தரமாக இருந்து வரும்.
மிகவும் சிறப்பான சில திரைப்படப்பாடல்களை இப்போது நினைவு கூரலாம்.

உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ - அசோக்குமார்
பூமியில் மானிட ஜென்மம் அடைந்தும் ஓர் - அசோக்குமார்
மன்மத லீலையை வென்றார் உண்டோ - ஹரிதாஸ்
அன்னையும் தந்தையும் தானே - ஹரிதாஸ்
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி - சிந்தாமணி
மனமே கணமும் மறவாதே - சாவித்திரி
வதனமே சந்திரபிம்பமோ - சிவகவி
மறைவாய் புதைத்த ஓடு - திருநீலகண்டர்

பாபநாசம் சிவனின் பாடல்கள் இடம் பெற்ற சில முக்கியமான படங்கள்:அசோக்குமார் - 1941லிருந்து செஞ்சுலட்சுமி - 1958 வரை.

திரு. தி. ரா. ச ஒரு நிகழ்வை நினைவுறுத்துகிறார்~ ‘... அவருக்கு சதாபிஷேக விழா நடந்தது.சென்னையில் கிருஷ்ணகான சபாவின் சார்பில் அது 1971வில் நடைபெற்றது... அந்த கொட்டும் மழையிலும் ஒரு சைக்கிள்ரிக்ஷாக்காரன் வண்டியை ஓட்டிகொண்டு வந்துகொண்டிருந்தான். கிட்டே வந்தவுடன் "ஐய்யா போலாமுங்களா" என்றான்.எனக்கு ஒன்றும் புரியவில்லை."என்ன மாமா கார் வரவில்லயா" என்றேன்."இல்லை அம்பி இவன்தான் எனக்கு எங்கே போனாலும் வந்து இருந்து பத்திரமாக கூட்டிக்கொண்டு போகிறான்.
காருக்கு 50ரூபாய் குடுத்தால் 5 நிமிஷத்தில் மயிலை கொண்டு விட்டுவிடுவான்.
ஆனால் அதே 50 ரூபாயை இவனுக்குக் கொடுத்தால் அரைமணியாகும்.
இவன் குடும்பமே ஒரு வாரத்துக்கு வயிறாறச்சாப்பிடும்" என்றார்...  அந்த இழையில் திரு. தி. ரா. ச.வுடன் நம் மின் தமிழ் முன்னணி கீதா சாம்பசிவம் 2007லியே அரட்டை அடிக்கிறார். நான் புதிசா சொல்றதுக்கு என்ன இருக்கு?
இன்னம்பூரான்
10 10 2011

pastedGraphic.pdf

உசாத்துணை:

‘அம்பா நீ இரங்காயெனில்...’ எம்.எஸ். பாடியது.