Thursday, August 17, 2017

கோப்புக்கூட்டல் [6]இன்றைய கோப்பு: [6]அலங்கார வேளையில் ஒரு அலங்கோலம்

கோப்புக்கூட்டல் [6]

ஒரு முன்குறிப்பு:
இது கூட ஆறின கஞ்சி என்றாலும், அடிப்படை மாறவில்லை. மேலதிக பதிவு ஒன்று வரக்கூடும். இன்று காலை அப்டேட்: பிராணவாயு நிறுத்தப்படவில்லை என்பதற்கு ஆதாரம் அளித்திருக்கிறார், அந்த ஒப்பந்தக்காரர்.
இன்னம்பூரான்
காலை 9 மணி: 18 08 2017
  1. Friday, August 18, 2017, 9:14
பிரசுரம்: http://www.vallamai.com/?p=79113
இன்னம்பூரான்
ஆகஸ்ட் 15, 2017
ஆங்கிலத்தில் ‘எல்லாவற்றையும் உட்படுத்திய’ என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன்.
இன்றைய கோப்பு: [6]
அலங்கார வேளையில் ஒரு அலங்கோலம்

A LARGE NUMBER OF CHILDREN ADMITED AT ICU FOR ENCEPHALITIS TREATMENT ,AT LEAST 30 CHILDREN LOST THEIR LIVES DUE TO ENCEPHALITIS IN LAST 48 HOURS AT GORAKHPUR’S BRD HOSPITAL AFTER SUPPLY OF LIQUID OXYGEN WAS DISRUPTED YESTERDAY DUE TO PENDING PAYMENT. EXPRESS PHOTO BY VISHAL SRIVASTAV 12.08.2017

சுதந்திர தினம் ஒரு சுபதினம். கொண்டாட வேண்டிய தருணத்தில், பொது மக்கள் மீளா துக்கத்தில் திண்டாடினால், அது பற்றிய கவலை, சோகம் நம்மை ஆட்கொள்ளும். கடந்த ஒரு வாரத்தில் கோரக்பூர் மருத்துவகல்லூரியை சார்ந்த நேரு ஆஸ்பத்திரியில் (950 படுக்கைகள் கொண்டது) 70 சிசுக்களும், சில வயது வந்தவர்களும் மரித்து விட்டார்கள். அது பற்றி இன்றைய சுதந்திர தின உரையில் குறிப்பிட்ட முதல்வர் யோகி ஆதிநாத், இன்றைய தினத்தை சங்கல்பம் செய்யும் தினமாக அறிவித்து, தன்னை ஆற்றிக்கொண்டார். நீண்ட கால உண்மையை செப்பிய அவர் ஊரறிந்த சமீபத்தில் நடந்த இழவின் உண்மை பின்னணியை கூறியிருக்க முடியாது; ஏனெனில் ஒரு விசாரணை துவங்கப்போகிறது. அதை ஒரு மாபெரும் சவாலாக ஏற்றுக்கொண்டு, பொது மன்றத்தில் பிராணவாயு பற்றி உள்ள தகவல்களின் அலசலை சொல்லாமல், நாட்டின் சுகாதாரமின்மை பற்றி அவர் முரசொலித்தது விகாரமாக இருக்கிறது. அது நிஜம் தான். ஆஸ்பத்திரி கந்தரகூலம், பல்லாண்டுகளாக.
என்னால் இயன்றவரை நம்பகமாக கிடைத்த செய்திகளை அறிந்த கொண்ட எனக்கு இது வரை வெளிவந்த எந்த கருத்தும் பிடிபடவில்லை. ஏனென்றால், ஒவ்வொருவரும் யானையை தொட்டறிந்த ஐந்து கண்ணொளி இழந்தவர்கள் போல முழு பின்னணியையும் நோக்கவில்லை. நானும் செய்யவேண்டிய அலசல்கள் பல உள்ளன. சாணக்கியர் தன் காலில் குத்திய பெரிய முள்ளை பிடுங்கி எடுத்ததும் அல்லாமல், அந்த செடியை வேருடன் பிடுங்கி தீயிட்டு கொளுத்தினாராம். கடந்த முப்பது வருடங்களாக உத்தரபிரதேசத்தை ஆண்ட மகாபிரபுக்கள் (நான் அந்த மாநிலத்தில் ஊழியம் செய்ததால், அவர்களில் சிலரை அறிவேன். சுயநல அரசியல் கம்பங்கூத்தாடிகள். ) மக்களை வாட்டிய மூளைக்காய்ச்சல் (Japanese Encephalitis and Acute Encephalitis Syndrome) பற்றி கவலை கொள்ளாததால், அம்மாநிலத்தின் கிழக்கு பகுதியில் மட்டும், ஐம்பது ஆயிரம் மக்கள் மடிந்தனர். முதல்வர் பலவருடங்களாக இது பற்றி நன்கு அறிவேன்; இதை ஒழிக்க பாடுபட்டேன் என்று ஆஸ்பத்திரி சவகிடங்கை பார்வையிட வந்த போது கூறினார். என்ன செய்தார் என்ற விவரம் தான், எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை, எனக்கு. ஆம். இது தற்காலிக அலசல் தான்.

ஆனால், இன்று ஆதாரத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டியதை பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும்.
மெத்தப்படித்த அரசுபதவி வகிக்கும் மேதாவிகள், தங்கள் முதுகுக்குக் கவசம் பூட்ட, முரண்செய்திகளை ‘இரக்கத்துடன்/வருத்தத்துடன்’ அளிப்பார்கள். பல முரண்செய்திகளில், சம்பந்தப்பட்ட உண்மைகளையும், சம்பந்தமில்லா வரலாற்று உண்மைகளையும் கலந்து சாக்குபோக்குக்கள் கொடுக்கும் போது, அது பொய்யாக மறுஜன்மம் எடுக்கிறது; ஆனால் தோற்றம் உண்மை போல. அது தான் இங்கு நடந்திருக்கிறது. ஒரு விதண்டாவாதத்திற்காக (அதற்கென்ன குறைச்சல்!) சிசுக்கள் (பிறந்த சில நாட்கள் அடகு காத்து பாதுகாக்க வேண்டியவை) மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். சிசுக்கள் உற்பத்தி ஆனதே ஆஸ்பத்திரியில். எந்த சுகாதாரமின்மையினால் அது வந்தது என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. அது தொலையட்டும். அந்த அமைப்புகளுக்கு பிராணாவாயு தேவையில்லையா? அல்லது டாக்டர்கள் ( குறிப்பாக டாக்டர் கஃபீல் அகமது ) பிராணவாயுக்காக ஆலாய் பறக்கவில்லையா? டாக்டர் கஃபீல் அகமது பல இடங்களுக்கு அலைந்து, தன் பணத்தை செலவழித்து, பிராணவாயு வரவழைத்து, பல உயிர்களை காப்பாற்றியதாக செய்தி. அவருக்கு பாரத ரத்னா கொடுக்கலாம் என்று நானும் எனக்கு அதுவரை கிடைத்த செய்திகளை வைத்து எழுதினேன். அவரோ வேலை நீக்கம் செய்யப்பட்டார். காரணமாகத்தான்! அவருக்கு ஒரு சொந்த ஆஸ்பத்திரி உளது, மற்ற டாக்டர்களை போல. அரசு ஆஸ்பத்திரியிலிருந்து பிராணவாயு சிலிண்டர்கள் கூடு விட்டு கூடு பாய்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் கிடக்குமாம். அவரை திருடன் என்றே குறிப்பிட்டு இருக்கிறது, ஒரு நம்பகத்தனமான ஊடகம். எனக்கு இது வியப்பு அளிக்கவில்லை. நான் 1989ல் பார்த்திருக்கிறேன். அலஹாபாத் கமலா நேரு ஆஸ்பத்திரியில், அதற்கு எதிரே வரிசையாக, அரசு டாக்டர்களின் க்ளினிக்கள் இருக்கும். கோடிக்கணக்கான செலவில் வாங்கப்பட்ட ஆஸ்பத்திரி உபகரணங்கள் ஒடிக்கப்பட்டு கிடக்கும். எங்கள் அலுவலகத்தின் ஒரு கடை நிலை ஊழியருக்கு ஒரு அவசர அறுவை சிகிச்சை தேவை. அந்த துறைத்தலைவர் எனக்கு மிகவும் பரிச்சயமானவர். அவரிடம் அந்த ஊழியரை அழைத்துச்சென்றேன். கனிவின் சிகரமாக திகழ்ந்த அவர், நான் சென்றபின் அவனிடம், ‘இது அபாயகரம். ஆஸ்பத்திரியில் செய்தால், நீ மரித்து போகலாம். நான் என் க்ளினிக்கில் செய்கிறேன். இத்தனை ரூபாய்!’ என்றாராம். பரிச்சயமாவது? மண்ணாங்கட்டியாவது? அந்த ஊழியர் காணாமல் போய்விட்டார். சில வாரம் கழித்து வந்தார். ஒரு கிருத்துவ ஆஸ்பத்திரி இலவசமாக எல்லாம் செய்தார்களாம். ஐயாவுக்கு புது பொலிவு. அவர் ஏன் கிருத்துவனாக மாறி நன்றிக்கடன் செலுத்த வில்லை என்று இன்று கூட புரியவில்லை. நானாக இருந்தால், ஏசு கிரிஸ்துவை பல்லக்கில் எழுந்தருள செய்திருப்பேன்! (ஐயங்காராகவே இருந்து கொண்டு, அதை செய்ய தயார்!)

உடனே யோகி மீது கில்லி தண்டா ஆடாதீர்கள். நம்ம ஸ்டான்லியில் வந்த நோயாளிகள், காமாலையால் போனஸ் அடி வாங்கியிருக்கிறார்கள்.

முடிந்தால், மேலும் எழுதுகிறேன். உதாரணமாக, வேலை நீக்கம் செய்யப்பட்ட உடனே ‘மாரல் க்ரவுண்ட்ஸ்’ ராஜிநாமா கொடுத்த தலைமை டாக்டர் ராஜீவ் மிஸ்ரா; புஷ்பா மெடிக்கலுக்கு பல லக்ஷம் பாக்கி; அவர்கள் எல்லா நோட்டீஸும் கொடுத்து விட்டாலும், இப்போது கூண்டில்; உண்மையை ஒத்துக்கொண்டு, அதற்கு பின் ஜகா வாங்கின அமைச்சர்பிரான்; பிணப்பரிசோதனை செய்யப்படவில்லை; ஆவணங்களும் காணாமல் போயின.
இத்தகைய கூத்துக்களுக்கு மரணம் எப்போது சம்பவிக்கும்? I don’t care what Modi or Yogi or Amit says. I don’t care what condolence message President Trump sends or what Anbumani has to say. Words are dead, to my mind. We want positive deeds from the people also.
-x-
சித்திரத்துக்கு நன்றி:

Sunday, August 13, 2017

கோப்புக்கூட்டல் [5] மனித சமுதாயம்



கோப்புக்கூட்டல் [5]

ஆங்கிலத்தில் 'எல்லாவற்றையும் உட்படுத்திய' என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன்.

இன்றைய கோப்பு: [5]




இன்னம்பூரான்
ஆகஸ்ட் 7, 2017

பிரசுரம்: http://www.vallamai.com/?p=78839

வல்லமை என்ற மின்னிதழ் வாரந்தோறும் ஒரு வல்லமையாளரை தேர்வு செய்கிறது. தற்காலம் அந்த பணியை மனமுவந்து முன்னின்று நடத்தி வரும் செல்வன், ஆய்ச்சிமார் போல் தயிரை கடைந்து வெண்ணெய் எடுப்பது போலும், தங்கத்தை புடம் போடும் ஆச்சாரி போலும், நன்கு ஆராய்ந்த பின் நமக்கு நற்செய்திகள் பல அளிக்கிறார், தேர்வு செய்யப்பட்ட வல்லமையாளரின் சாதனைகளை விவரிக்கும்போது. எனக்கு எவிடென்ஸ் கதிர் பற்றி பல வருடங்களாக தெரியும்; திரு வின்சென்ட் ராஜ் பற்றி இன்று தான் தெரியும்.

திரு. வின்செண்ட் ராஜ் தன்னலம் நாடாதவர், நீதிக்கு போராடும் விடாக்கொண்டர் என்பது தெளிவாக தெரிகிறது. சமூகத்தில் அடிக்கசண்டாக தங்கிக்கொண்டு, சமுதாயத்தில் நஞ்சு விதைக்கும் சாதி,மத, இன பேதங்கள், கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்து,ஊழல்கள், முறைகேடுகளுக்கு அரசு முன்னின்று கவசம் பூட்டும் கேவலங்கள் ஆகியவற்றை எதிர்ப்பது உயிருக்கு அபாயம் என்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். அவர் அத்துடன் நிற்காமல், சமுதாயத்தால் காயம் பட்டவர்களுக்கு புத்துணர்ச்சியும், புனர்வாழ்வும் அளிக்க பாடுபடுவது போராளியின் அமைதிச்சாரல் என்க. போனஸ்:  கூட்டு போராளி.

திரு.செல்வன் எவிடென்ஸ் கதிர் அவர்கள் சட்டத்தை கையாளும் விதத்தை வருணித்திருப்பது தேவையான அணுகுமுறை தான். சட்டத்தை எதிர்க்கும் முன் அமலில் இருக்கும் சட்டத்துக்கு நாம் கட்டுப்படுகிறோமா என்ற வினாவுக்கு விடை நாடுவது நலம் பயக்கும்.

தேசிய சட்ட ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் ஆகியவை சாதிய படுகொலைகளுக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்தும், இன்னும் இந்த அரசாங்கம் அதை நிறைவேற்றாமல் கிடப்பில்போட்டு வைத்திருப்பது பிரதிநிதித்துவ மேலாண்மைக்கு, ஒரு இழுக்கு. ஏன்? தமிழ் நாட்டு அரசியலில் சாதீயம் தான் பல்லாண்டுகளாக பேயாட்டம் ஆடுகிறது. இந்த சூழ்நிலையில் நமக்கு நூற்றுக்கணக்கான எவிடென்ஸ் கதிர்கள் தேவை.

உச்ச நீதிமன்றத்தில் 22 மாநில அரசுகள் தங்களின் மாநிலங்களில் சாதியப் படுகொலையில் நிகழ்வதை ஒப்புக்கொண்டபோதும், கலப்பு திருமணங்கள் அதிகம் நடக்காத மாநிலங்களில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் அவலட்சணத்தில், தமிழக அரசு தங்கள் மாநிலத்தில் சாதிய படுகொலைகள் நிகழ்வதே இல்லை என்று கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல. அவ்வாறு சாட்சியம் பதிவு செய்தவர் மீது ‘பொய் சாட்சி’ வழக்கு பதிவு செய்ய வேண்டும். பல்லாண்டுகளாக, எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், மலம் அள்ளுவது, துப்புரவு செய்வது ஆகியவற்றை பற்றியும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் அரசு இயந்திரத்தால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 175 சாதிய படுகொலைகள் இங்கு அரங்கேறி உள்ளன. அவற்றில் கொலையுண்டவர்களில் 80% பேர், தலித் இளைஞர்களைக் காதலித்து மணமுடித்தப் பெண்களே என்ற புள்ளி விவரம் தமிழ் சமுதாயத்தை, நமது சங்க கால பண்பை எள்ளல் செய்கிறது. ஒரு ஆறுதல் செய்தி: ஒரு பெண் ஒரு இளைஞனை அழைத்து வருகிறாள், காதலனாக. அவர் நசுக்கப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர். எதிர்நீச்சல் போட்டு முன்னுக்கு வந்த குடும்பம். அதனால் மேல்தட்டு தருமமிகு சென்னை சமுதாயம் அவர்களை ஏற்றுக்கொள்வதை கண்ணார கண்டேன். பிறந்த வீட்டில் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்; அவர்களிடம் சொல்லப்போவதில்லை என்பதில் திடமாக இருந்தாள். என் செய்வது? என் தீர்மானத்தை ஒப்புக்கொள்வதிலும் தீர்மானமாக இருந்தார்கள், இருவரும். அதாவது என் சம்மதமில்லாமல் திருமணம் முடிப்பதில்லை என்ற தோற்றம். யாதொருவிதமான அசம்பாவிதம் இல்லாமல் திருமணம் நிறைவேறியது. பிறந்த வீட்டிலும் ஓரளவுக்கு சமாதானம் ஆகி விட்டது, மேலும் மென்மையான செய்திகள் உண்டு. அவரவது தனிமை உரிமையை மதித்து (ப்ரைவசி) மேலதிக விவரங்களை கூறவில்லை. இந்த உண்மை வரலாறு ஒரு பாடம் போதிக்கிறது. அவரவது குடும்பத்தில் முதியவர்கள் அறிவு முதிர்ச்சியையும், சங்கப்பாடல்களில் வரும் முக்கோல்பவர்களை போல் இயல்பு வாழ்க்கையின் சுவாசத்தையும், தங்கள் மலர்ந்த நினைவுகளின் இன்பத்தையும் முன்னிறுத்தி கலப்பு மணமோ, சாதி மணமோ, மனம் ஒத்து நடக்கும் காதல் மணங்களை வரவேற்க வேண்டும்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: 
இப்பி

இப்போதைய பின்குறிப்பு: இணையம் கிடைக்காததால் தாமதம் ஆயினும், விடுதலை தினத்துக்கு முஸ்தீபாக, இந்த இழை அமையட்டும். உண்மை நிலைக்க, சமுதாயம் தான் உழைக்கவேண்டும்.

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com